புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம் உள்ளிட்ட 7 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (30.12.2019) நடந்தது. இதில் வாக்குப்பதிவு மாலை 05.00 மணிக்கு முடிந்த நிலையில் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவரங்குளம் ஒன்றியத்தில் 80.41 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக அறந்தாங்கி ஒன்றியத்தில் 54.11 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த களக்குடி விவசாயி சோமையா (வயது 60) வாக்குச்சாவடிக்குள் செல்லும் போது வளாகத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
வாக்களிக்கச் சென்ற முதியவர் வாக்களிக்கும் முன்பே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.