Skip to main content

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்காமல் எப்படி சம்பளம் வழங்க முடியும்? -உயர்நீதிமன்றம் கேள்வி!

Published on 24/06/2020 | Edited on 24/06/2020

 

private schools fee coronavirus lockdown teachers salary chennai high court

 

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில், அதன் மாநில பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் தாக்கல் செய்த வழக்கில், ‘தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டவிரோதமானது. பள்ளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலித்தால்தான், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். 

கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் இயங்காவிட்டாலும், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருகின்றன. தற்போது கல்விக் கட்டணம் வசூலிக்க அனுமதித்தால்தான், ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியும். எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து, கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, சங்கம் சார்பாக வக்கீல் விஜய்ஆனந்த் ஆஜராகி, அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். இதைக் கேட்ட நீதிபதி, அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்களுக்கும் மற்றும் பிற ஊழியர்களுக்கும் ஊதியத்தை முறையாக வழங்க வேண்டுமென்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கின்ற நிலையில், அரசு உதவி பெறாத பள்ளிகள், கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி சம்பளத்தை வழங்க முடியும், ஆன்லைன் வகுப்புகளை பெரும்பாலான பள்ளிகள் தொடங்கிவிட்டு, வகுப்புகளை நடத்த ஆசிரியர்களை கல்வி நிறுவனங்கள் நிர்பந்திக்கும் நிலையில், எப்படி சம்பளம் வழங்காமல் இருக்க முடியும் என  கேள்விகள் எழுப்பினார். பின்னர், இவ்வழக்கு குறித்து, தமிழக அரசு ஜூன் 30-ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். 

 

சார்ந்த செய்திகள்