
நடிகரும், தே.மு.தி.க.வின் தலைவருமான விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். எனினும், அவர் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காகச் செல்வது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் விஜயகாந்த் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் விஜயகாந்தின் உடல்நிலைக் குறித்து அவரது குடும்பத்தாரிடம் கேட்டறிந்தனர். அதன் தொடர்ச்சியாக, விஜயகாந்தின் உடல்நிலைக் குறித்து அவரது மனைவியும், தே.மு.தி.க.வின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கேட்டறிந்தார். அப்போது, விஜயகாந்துக்கு மருத்துவர்கள் அளித்து வரும் சிகிச்சைக் குறித்து கேட்டறிந்த பிரதமர், விஜயகாந்த் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வாழப் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.