Skip to main content

காப்பகத்தில் தங்கியிருந்த மனநலம் பாதித்த சிறுமி கர்ப்பமான விவகாரம்; குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் விசாரணை

Published on 11/09/2018 | Edited on 11/09/2018

 

om


சேலத்தில் தனியார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பம் அடைந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் இன்று (செப்டம்பர் 11, 2018) நேரில் விசாரணை நடத்தினார். 


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேக்கம்பட்டி வட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஏழைத்தாய் சரோஜா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவருடைய 16 வயது மகள், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் சரோஜா, மகளை பராமரித்து வந்தார்.


அடிக்கடி வீட்டில் இருந்து காணால் போவதும், சாலையில் எங்காவது சுற்றித்திரியும் மகளை காவல்துறையினர், உறவினர்கள் மீட்டு வந்து வீட்டில் ஒப்படைப்பதுமாக நாட்கள் நகர்ந்தன. மகளின் சிகிச்சை செலவுகளுக்காக சரோஜா, பலரிடம் ரூ.30 ஆயிரம் வரை கடன் வாங்கியிருந்தார். கடனை அடைப்பதற்காக அவர் கடந்த ஜூன் மாதம் முதல் சென்னையில் உறவினர் வீட்டில் குழந்தையை பராமரிக்கும் வேலைக்கு மாதம் ரூ.8000 சம்பளத்திற்கு வேலைக்குச் சென்றார்.


இதையடுத்து மகளையும் சென்னைக்கு அ-ழைத்துச்செல்ல முடியாது என்பதால், சேலம் ராம் நகரில் உள்ள லைப்லைன் டிரஸ்ட் காப்பகத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றார். அவ்வப்போது போன் மூலம் மகளிடம் பேசி வந்தார்.

 

o


இந்நிலையில், மனநலம் பாதித்த சிறுமிக்கு மாதவிலக்கு சரியாக போகவில்லை என்றதோடு, அவருக்கு வயிறும் சற்று பெரிதாக காணப்பட்டதால் சந்தேகம் அடைந்த காப்பக நிர்வாகிகள் இதுகுறித்து சரோஜாவுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர். கடந்த 31.8.2018ம் தேதி நேரில் வந்த சரோஜா, மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தார்.


அப்போது மனநலம் பாதித்த சிறுமி நான்கு மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதுகுறித்து காப்பக ஊழியர்களிடம் கேட்டதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இதுகுறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். மேற்கொண்டு மகளை அந்த காப்பகத்தில் தங்க வைக்க மனமில்லாத சரோஜா, அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு கடந்த 7.9.2018ம் தேதி கருக்கலைப்பு செய்யப்பட்டது.


தமிழ்நாடு மகளிர் அமைப்பு சார்பில் இரு நாள்களுக்கு முன்பு லைப்லைன் டிரஸ்ட் காப்பகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இதற்கிடையே மனநலம் பாதித்த சிறுமி மர்ம நபர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதும், அதனால் அவர் கர்ப்பம் அடைந்தது குறித்தும் தகவல் அறிந்த தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமலிங்கம் இன்று சேலத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.


அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். சிறுமியின் தாயாரிடமும் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் யார்? என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இப்போதுள்ள சூழலில் சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அவசியம் என்பதால், சிகிச்சை முடிந்த பிறகு தொடர் விசாரணை நடத்தப்படும். காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் வன்முறை நடந்திருந்தால், காப்பக நிர்வாகிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழகத்தை பொறுத்தவரை சிறுமிகளுக்கு குறிப்பாக மனநலம் பாதித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான பாலியல் வன்முறைகள் சிறுமிகளுக்கு போதைல் பொருள்களை கொடுத்த பிறகுதான் நடக்கின்றன. இந்த சிறுமிக்கும் மதுபானத்தைக் கொடுத்துதான் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். 


இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் விசாரணை அறிக்கை ஆணையத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமலிங்கம் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.