Skip to main content

முன்ஜாமீன் கோரி பொன். மாணிக்கவேல் மனு; சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு!

Published on 28/08/2024 | Edited on 28/08/2024
Pon Manikavel sought anticipatory bail CBI Strong opposition

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உள்ள சிலைகள் காணாமல் போனதாகக் கடந்த 2010ஆம் ஆண்டில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக விசாரிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும், கடத்தப்பட்ட சிலைகளையும் மீட்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதன்படி அமைக்கப்பட்ட கடத்தல் தடுப்பு பிரிவில் டிஎஸ்பியாக காதர் பாட்ஷா செயல்பட்ட போது  சிலை கடத்தல் மன்னன் என்று சொல்லக்கூடிய  சுபாஷ் கபூரை வழக்கில் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அச்சமயத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்குப் பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  அதனைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரியாக இருந்த காதர் பாட்ஷா மீதே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியில் வந்தார்.

Pon Manikavel sought anticipatory bail CBI Strong opposition

இத்தகைய சூழலில் தான் காதர் பாஷா பொன். மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார். இது தொடர்பாக சிபிஐக்கு புகார் அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொன்.மாணிக்கவேலுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி அவர் மீது சி.பி.ஐ. 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனையடுத்து, “இந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தன்னை கைது செய்யக்கூடாது. எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கைக் கையாளப்படவில்லை. இந்த வழக்கில் தனக்கு எந்த முகாந்திரமும் இல்லை”எனத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (28.08.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் வாதிடுகையில், “பொன். மாணிக்கவேலைக் கைது செய்து விசாரித்தால்தான் சிலை கடத்தல் தொடர்பான உண்மைகள் வெளிவரும். காதர் பாட்ஷாவை பொய்யான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளார். யாரைக் காப்பாற்ற இவர் இவ்வாறு செயல்பட்டார் என்பதைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால் தான் சிலை கடத்தலில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும். எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Pon Manikavel sought anticipatory bail CBI Strong opposition

அப்போது நீதிபதிகள், “பொன். மாணிக்கவேலுக்கும் இந்த சிலை கடத்தல் மன்னனாகப் பார்க்கப்பட்ட சுபாஷ் கபூருக்கு நேரடியாகத் தொடர்புகள் உள்ளதா?. அதற்கான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர். அப்போது சீலிடப்பட்ட கவர் ஒன்றை நீதிபதியிடம் சிபிஐ தரப்பில் ஒப்படைக்கப்பட்டது. அதில் போதிய விவரங்களும், போதிய முகாந்திரங்களும் உள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சீலிடப்பட்ட கவரை முழுமையாகப் படித்துவிட்டு நாளை (29.08.2024) விசாரணையைத் தொடரலாம் என நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்