கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர சம்பவம் குறித்து புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
![Pollachi issue SP Pandiarajan have been transferred](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ig0a_pAVF2NZDYc8vSBJJPvYQa0OAmw6-nN7wWKjRWI/1554102920/sites/default/files/inline-images/pandiarajan.jpg)
கோவை எஸ்.பி.யாக இருந்த பாண்டியராஜனை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்ட புதிய எஸ்.பி.யாக சுஜித்குமாரை நியமித்திருக்கும் தமிழக அரசு, எஸ்.பி பாண்டியராஜன் எங்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தெளிவாகத் தெரிவிக்கவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![Pollachi issue SP Pandiarajan have been transferred](http://image.nakkheeran.in/cdn/farfuture/0gWpb3Xev8sEhiqUp61lTbNJlGQiw2oRSl4xilUrX9Y/1554103035/sites/default/files/inline-images/sujithkumar.jpg)
பொள்ளாச்சி கொடூர வழக்கில் மெத்தனமாக நடந்து கொண்டது, பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டு மிகப்பெரிய சட்ட விதி மீறலை செய்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், தற்போது கோவையில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரு வாரத்துக்குப் பிறகு குற்றவாளி அடையாளம் காணப்பட்டதற்கும் பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தி நிலவிய நிலையில் பாண்டியராஜன் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மட்டுமின்றி பொள்ளாச்சி டி.எஸ்.பி ஜெயராமனும். இன்ஸ்பெக்டர் நடேசனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி பொள்ளாச்சியில் எஸ்.பி. பாண்டியராஜனுக்கு மாற்றாக சுஜித்குமார், டி.எஸ்.பி. ஜெயராமனுக்கு மாற்றாக கே.ஜி. சிவக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் நடேசனுக்கு மாற்றாக ஆர்.வெங்கட்ராமனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.