Skip to main content

“உழைக்காமல் கஷ்டப்படாமல் பணம் கொட்டும்!” -முகநூல் தோழிகளிடம் நகை பூஜை மோசடி!

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 

‘கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பையில் நெய் வடியுமாம்..’

-இந்த கிராமத்துச் சொலவடை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பொருந்திப் போகுமோ? அப்படி ஒரு சம்பவம்தான் விருதுநகர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

 

சாத்தூரைச் சேர்ந்த ராஜ்குமாரும் நவீன்குமாரும் கில்லாடி இளைஞர்கள். தங்களின் மோசடியான செயலுக்கு முகநூலைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். முகநூல் நட்பு என்ற பெயரில் பெண்களுக்கு வலை விரிப்பதும், அவர்களை ஏமாற்றுவதும் நம் நாட்டில் வாடிக்கையாகிவிட்டது. ராஜ்குமாரும் நவீன்குமாரும் அந்த ரக ஆண்கள் அல்ல. வசதி படைத்த பெண்களிடம் பெண் குரலில் பேசி தோழிகள் ஆகிவிடுவர். “நாங்க சீரியல் நடிகைகளாக்கும்..” என்று பெண்களின் பலவீனம் அறிந்து பேசுவார்கள். இவர்களின் சுவாரஸ்யமான பேச்சில் முகநூல் தோழிகள் லயித்து, நம்பிக்கை வைத்தவுடன் “ஒரு கோவில் இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த கோவில். உங்கள் வீட்டு நகைகளை அக்கோவிலில் வைத்து பூஜை செய்தால், செல்வம் பெருகி தொடர்ந்து நல்லதே நடக்கும்.” என்று தூண்டில் போட்டிருக்கின்றனர். கடுமையாக உழைத்திடாமல், எந்தக் கஷ்டமும் படாமல்,  பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு எளிதான வழி இருக்கிறதென்று இவ்விருவரும் உருகி உருகிச் சொன்னதை, அப்படியே நம்பிவிட்டனர் அந்த முகநூல் தோழிகள். பிறகென்ன? தோழிகளின் நகைகளெல்லாம் பறிபோயின.

 

police

 

இரண்டு மாதங்களுக்கு முன் சாத்தூர் டவுண் காவல் நிலையத்தில் சிவகாசியைச் சேர்ந்த ராதிகாவும் செண்பக பவானியும் மோசடியால் தாங்கள் நகைகளை இழந்தது குறித்து புகார் செய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு, கைபேசி எண் மூலம் ‘ட்ரேஸ்’ செய்தபோது, ராஜ்குமாரும் நவீன்குமாரும்தான் அந்த மோசடிப் பேர்வழிகள் என்பது தெரிந்துபோனது. தனிப்படையினர் இவ்விருவரையும் கொத்தாக அள்ளிக்கொண்டு வந்து விசாரித்தனர். அவர்களிடமிருந்து 61 பவுன் நகைகளையும், ரூ.3 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.   

 

police

 

 

 

police

 

 

police

 

இதே ரீதியில், இவ்விருவரும் பல பெண்களிடம் பேசியே பணத்தைக் கறந்திருக்கின்றனர். யார் யாரை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது குறித்த விசாரணை  தொடர்ந்து நடக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.