Skip to main content

இறக்கும் போகும் தருவாயில் 6 பேருக்கு உயிர் கொடுத்த பெண்; மருத்துவர்கள் மரியாதை

Published on 09/08/2024 | Edited on 09/08/2024
organs donate for woman Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மனைவி மாரிக்கண்ணு(46). இவர் ஆடி மாதம் என்பதால் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்குப் பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது இவருடன் வேறு சிலரும் பாதயாத்திரை மேற்கொண்டனர். இந்த நிலையில், நார்த்தாமலை அருகே சென்றுக்கொண்டிருந்த போது, இருசக்கர மோதியதில் மாரிக்கண்ணு படுகாயம் அடைந்தார். 

உடனடியாக மாரிக்கண்ணு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட மாரிக்கண்ணுவை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால் இவரை காப்பாற்ற முடியாவிட்டாலும் இவரது உடல் உறுப்புகளை பொருத்தி உயிருக்குப் போராடும் பலரது உயிர்களைக் காப்பாற்றலாம் என்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜ்மோகன், மாரிக்கண்ணுவின் மகள்கள் மலர், செல்வமணி மற்றும் உறவினர்களிடம் கூறியிருக்கிறார். அதற்குஅவர்களும் சம்மதம் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து மாரிக்கண்ணுவின் கல்லீரல், கண்கள் மதுரைக்கும், ஒரு சிறுநீரகம் தஞ்சைக்கும், மற்றொன்று சிறுநீரகம், நுரையீரல் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், உயிரிழந்த மாரிக்கண்ணு உடலுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) ராஜ்மோகன், மருத்துவமனை கண்காணிப்பாளர் தையல் நாயகி, நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி மற்றும் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாரிக்கண்ணு உடல் அமரர் ஊர்தியில் சொந்த ஊருக்கு அனுப்பும் போது மருத்துவப் பணியாளர்கள் வரிசையாக நின்று கை கூப்பி வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.

இது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் கூறும் போது, “மூளைச்சாவு அடைந்த மாரிக்கண்ணுவின் உடல் உறுப்புகளால் பலர் உயிர் வாழமுடியும் என்பதை உறவினர்களிடம் சொன்னதும் உடனே ஒப்புக் கொண்டனர். அவர்களின் ஒப்புதலோடு உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு மதுரை, தஞ்சாவூர், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்த மாரிக்கண்ணு உடலுக்கு மருத்துவக்கல்லூரி சார்பில் அஞ்சலியும் மரியாதையும் செலுத்தப்பட்டது. உடல் உறுப்பு தானம் வழங்க ஒப்புதல் அளித்த உறவினர்களுக்கு நன்றி கூறியுள்ளோம். புதுக்கோட்டை மாவட்டம் உடல் உறுப்பு தானத்தில் விழிப்புணர்வு பெற்ற மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

உயிர் போகும் தருணத்தில் 6 பேருக்கு உயிர் கொடுத்த பெண்ணுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதுடன் பெருமையாகப் பேசி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்