Published on 24/07/2021 | Edited on 24/07/2021

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது. அதனைத் தொடர்ந்து நோய்ப் பரவலின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போதுவரை சில கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில், இன்றுமுதல் (24.07.2021) தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களைத் திறக்க பொதுநூலக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். போட்டித் தேர்வுகள் நெருங்கிவரும் நிலையில் நூலகங்களைத் திறக்க வேண்டும் என ஏராளமானோர் கோரிக்கை வைத்ததை அடுத்து, 75 நாட்களுக்குப் பிறகு இன்று நூலகங்கள் திறக்கப்பட இருக்கிறது. கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள வாசகர்களுக்கு நூலகத்தைப் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதேபோல் 15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறார்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.