
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி (17.9.2023) சென்று கொண்டிருந்தார். அப்போது தனது வாகனத்தில் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் கேட்டு டி.டி.எஃப் வாசன் தாக்கல் செயத மனுக்களை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து 2வது முறையாக ஜாமீன் கேட்டு டி.டி.எஃப் வாசன் தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், டி.டி.எஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் மூன்று வாரங்களுக்கு டி.டி.எஃப் வாசன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது