Skip to main content

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: எடப்பாடியின் மூக்கை உடைத்த விவசாயிகள்!

Published on 20/12/2018 | Edited on 20/12/2018

எட்டுவழிச்சாலைக்கு நிலம் கொடுக்க மறுத்து, சேலத்தில் ஒட்டுமொத்தமாக விவசாயிகள் திரண்டு வந்து புதன்கிழமையன்று ஆட்சேபனை மனு வழங்கினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி 11 சதவீதம் பேர்தான் எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பதாக கூறிவந்த நிலையில், விவசாயிகள் ஒற்றுமையாக செயல்பட்டு அவருடைய மூக்கை உடைத்துள்ளனர்.

 

 

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சேலம் முதல் சென்னை வரை எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. இத்திட்டத்துக்காக பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலப்பரப்பை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தில் மட்டும் 18 கிராமங்களில் 186 ஹெக்டேர் தனியார் பட்டா நிலங்கள் உள்பட மொத்தம் 248 ஹெக்டேர் நிலம் இந்தத் திட்டத்தால் பறிபோகின்றன.

 

 

எட்டு வழிச்சாலைக்காக எடுக்கப்பட உள்ள நிலத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலமானது, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சொந்தமானதாகும். அவை இருபோகம் விளைச்சல் தரக்கூடியவை. இதனால் தொடக்கம் முதலே விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

கஞ்சமலை, கவுந்திமலை, வேடியப்பன் மலைகளில் உள்ள கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்காகவும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக மட்டுமே இத்திட்டம் கொண்டு வரப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், எட்டுவழிச்சாலைத் திட்டம் என்பது முற்றிலும் வணிகப்பயன்பாட்டுக்கானது என்றும் வரைவு அறிக்கையில் சொல்லப்பட்டு உள்ளது. இழப்பீட்டுத் தொகை பற்றிய அறிவிப்பிலும் நம்பகத்தன்மை ஏற்படவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் விவசாயிகள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 

 

 

இந்நிலையில்தான், கடந்த 15.12.2018ம் தேதியன்று ஓமலூரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு 11 சதவீதம் மக்கள்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 89 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்,' என்று கூறினார். 

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இத்திட்டத்திற்கு எதிராக களமாடி வரும் விவசாயிகள், முதல்வரின் எட்டுவழிச்சாலை ஆதரவு பேச்சால் மேலும் கொதிப்படைந்தனர். அவருக்கு தங்களின் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்யும் வகையில், முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் புதன்கி-ழமையன்று (19.12.2018) விவசாயிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆட்சேபனை மனுக்களை வழங்கினர். 

 

 

நிலவாரப்பட்டி, பூலாவரி, வீரபாண்டி, நாழிக்கல்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, குப்பனூர், பருத்திக்காடு, ஆச்சாங்குட்டப்பட்டி, உத்தமசோழபுரம், அரியானூர், சித்தனேரி, வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை 10 மணியளவில், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடினர். 

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

விவசாயிகள் அங்கே ஒன்று கூடக்கூடாது என்றும், பேரணியாகச் செல்ல அனுமதியில்லை என்றும் காவல்துறையினர் அவர்களை எச்சரித்தனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, விவசாயிகள் அங்கேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக தரையில் அமர்ந்து அரசுக்கு எதிராக முழ க்கங்களை எழுப்பினர். பொறுமையி-ழந்த காவல்துறையினர் அவர்களை பேரணியாகச் செல்ல அனுமதித்தனர்.

 

 

விவசாயிகள் பேரணியாக பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வள்ளுவர் சிலை, ராஜாஜி சிலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பல விவசாயிகள் கரும்பு மற்றும் கோரிக்கை அட்டைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். பேரணியில் முதல்வருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

 

 

ஆட்சியரக வளாகத்திற்குள் அனுமதிக்கும் முன்பாக விவசாயிகளில் யாராவது மண்ணெண்ணெய் பாட்டில் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களுடன் வந்துள்ளனரா என்பதை காவல்துறையினர் சோதனை செய்த பிறகே ஆட்சியரக வளாகத்திற்குள் அனுப்பினர். 

 

 

காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை, உதவி ஆணையர்கள் ராஜா காளீஸ்வரன், சுந்தரமூர்த்தி, ஈஸ்வரன், ஆய்வாளர்கள் சரவணன், நாகராஜன், குமார், பிரேமலதா, ஷர்மிளாபானு ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டிருந்தனர். 

 

 

விவசாயிகளிடம் இருந்து ஆட்சேபனை மனுக்களை பெறுவதற்காக நிலம் எடுப்பு வட்டாட்சியர்கள் தலைமையில் ஐந்து அலகுகளாக பிரிக்கப்பட்டு, அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். முதல் அலகில் 92 பேரும், இரண்டாவது அலகில் 150  பேரும், மூன்றாவது அலகில் 40 பேரும், நான்காவது அலகில் 34 பேரும், ஐந்தாவது அலகில் 48 பேரும் ஆட்சேபனை மனுக்களை வழங்கினர். அதாவது மொத்தம் 364 பேர் எட்டுவழிச்சாலைக்கு எதிராக ஆட்சேபனை மனுக்களை வழங்கினர்.

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

இதையடுத்து விவசாயிகள், எத்தனை பேர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு என்ற விவரங்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, ஆட்சியரக வளாகத்திலேயே தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 

ஒரே நபருக்குச் சொந்தமாக பல சர்வே எண்களில் நிலங்கள்¢ இருப்பதால், ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் தனித்தனியாக ஆட்சேபனை மனுக்கள் தருமாறு அதிகாரிகள் கூறினர். அதற்கு விவசாயிகள், 'நாங்கள் கொடுத்த ஒரே ஆட்சேபனை மனுவில் சர்வே எண்களை பிரித்து எழுதி இருக்கிறோம். அவற்றை எண்ணிப்பார்த்து எத்தனை சர்வே எண்தாரர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகக் கணக்கிட்டுச் சொல்லுமாறு கூறினர். 

 

 

இதனால் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர். அப்போதும் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவர்களை கைது செய்வதற்கும் காவல்துறையினர் தயாராக வாகனங்களை கொண்டு வந்தனர். பின்னர் விவசாயிகள், ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் தனித்தனியாக ஆட்சேபனை மனுக்களை தருவதற்கு ஒப்புக்கொண்டனர்.  

 

 

இதையடுத்து ஐந்து அலகுகளிலும் சேர்த்து மொத்தம் 556 ஆட்சேபனை மனுக்களை வழங்கியுள்ளனர். எட்டுவழிச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் 725 சர்வே எண்களுக்கு பாத்தியப்பட்ட நிலங்களை கையகப்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி கணக்கிட்டால் 76.68 விவசாயிகள், எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனு கொடுத்துள்ளது ஊர்ஜிதமாகியுள்ளது. 

 

 

அதிமுகவை சேர்ந்த விவசாயிகள், மிகச்சிறிய அளவில் நிலம் வைத்திருப்போர் உள்ளிட்ட பிரிவினர் இன்றைய பேரணியில் கலந்து கொள்ளவில்லை. எனினும், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மூக்கை உடைத்துவிட்டதாகவும் சேலம் விவசாயிகள் கூறினர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.