![For non-payment of the loan, the woman was locked up and tortured](http://image.nakkheeran.in/cdn/farfuture/oNO0Ld4cpT5lavInaIQ6JqnTHN5ZiAUf80vzNuMZo14/1707917654/sites/default/files/inline-images/Untitled-1_730.jpg)
வாங்கிய கடனைத் திருப்பித் தராததால் துணை நடிகரின் மனைவியை அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் தங்கி திரைத்துறையில் துணை நடிகராக இருந்து வருகிறார். இவரது மனைவி மாலதி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் அதிகளவில் கடன் வாங்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக அவர் வசிக்கும் பகுதியில் உள்ள உமா ராணியிடம் ரூ. 6 லட்சம் வரை மாலதி கடன் வாங்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வாங்கிய கடனை மாலதி திருப்பிச் செலுத்தாததால் தன்னுடைய வீட்டில் உமா ராணி மாலதியை அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, துணை நடிகர் மதியழகன் சில வழக்கறிஞர்களுடன் உமா ராணியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் உமா ராணி யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், அவர்கள் காந்தி மார்க்கெட் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உமா ராணியின் வீட்டிற்குள் சென்று மாலதியை மீட்டனர். இதனைத் தொடர்ந்து உமா ராணியை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உமா ராணி பாஜகவில் பொறுப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.