Skip to main content

நிவர் புயல் எச்சரிக்கை: சேலத்தில் 23 இடங்கள் பதற்றம்! ஹெல்ப் லைன் எண்கள் அறிவிப்பு

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

nivar cyclone salem district helpline numbers

 

 

நிவர் புயலால் கனமழை பெய்யக்கூடும் என்பதால், சேலம் மாவட்டத்தில் 23 பகுதிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இதற்கு நிவர் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் சென்னை, கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

 

சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, அதிகளவு மழைப்பொழிவு இருக்கும்பட்சத்தில் மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் இருக்கிறது என்பது குறித்து கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 23 பகுதிகள் பதற்றமான இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம் அமைத்து, அங்கு தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

 

nivar cyclone salem district helpline numbers

 

பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் கடித்தால் அதற்குரிய மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மீட்பு பணிகளுக்குத் தேவையான எக்ஸ்கவேட்டர் இயந்திரம், ஜெனரேட்டர், மரம் அறுக்கும் உபகரணம், டார்ச் லைட், தீப்பெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. 

 

மாவட்டம் முழுவதும் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 

கனமழையின்போது பொதுமக்கள் திறந்த வெளியில் நிற்காமல் மேற்கூரை உள்ள இடங்களில் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புயல், மழையால் பாதிப்பு ஏற்பட்டாலோ, உதவிகள் தேவைப்பட்டாலோ அதுகுறித்த தகவலை தெரிவிக்க வசதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும்.

 

பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கோ, 0427- 2452202 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புரட்டி எடுக்கும் கனமழை; உதவி எண்கள் அறிவிப்பு 

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Torrential rain; Notification of helpline numbers

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (18.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (18.12.2023) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகப் பல்கலைக்கழக பதிவாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த சூழலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (18.12.2023) காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (18.12.2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவிகளுக்கு உதவி எண்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். அதன்படி, தூத்துக்குடி மாவட்ட பேரிடர் கட்டுப்பாடு மையம் எண்ணான 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மக்கள் அவர்களுடைய அவசர உதவிகளை கேட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார். மேலும், மாநில பேரிடர் கட்டுப்பாடு மைய எண்ணான 1070ஐ என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னக உதவி மைய எண்ணான 9445854718 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

அதே போல், திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு அவசர உதவிகளுக்கு 04622501012 என்ற எண்ணையும், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அவசர உதவிகளுக்கு 04652231077 என்ற எண்ணையும், தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு 04633290548 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

அரசு போக்குவரத்துக் கழகங்களின் உதவி மைய எண் அறிவிப்பு 

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

Notification of Helpline Number of Government Transport Corporations

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா உதவி மைய எண் ‘1800 599 1500’ என்ற 11 இலக்க எண் கடந்த 09.03.2023 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டு தற்போது வரை உபயோகத்தில் இருந்து வருகிறது.

 

இந்த சூழலில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த 11 இலக்க உதவி மைய எண்ணை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், நாளை முதல் (10.11.2023) முதல் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் (149) அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி மூன்று இலக்க புதிய உதவி மைய எண் 149 ஐ தொடர்பு கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.