Skip to main content

ஊராட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம்.. எச்சரிக்கும் கிராம மக்கள்! 

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

Neyveli Sepalantham village people demand for local body election

 

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள தெற்கு சேப்ளாநத்தம் ஊராட்சியில் சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி அந்த ஊராட்சியின் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜலட்சுமி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்ததால், தெற்கு சேப்ளாநத்தம் ஊராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக் கோரி அந்தக் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததால், தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அக்கிராம மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.  

 

இந்நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்த மாவட்ட நிர்வாகம் முன்வராததால், அக்கிராமத்தினர் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். 

 

இதனால், ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், நெய்வேலி மேட்டுக்குப்பம் ஆர்ச் கேட் முன்பு, மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும், பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர முயற்சி செய்யாத தமிழக அரசை கண்டித்தும், கருப்புக்கொடி ஏந்தி, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

ஆர்ப்பாட்டத்தின்போது தங்களது கிராமத்திற்கு உடனடியாக ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தல் நடத்த வேண்டும் என்றும், என்.எல்.சி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட தங்களது கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 ரூ.48 கோடியில் 504 அடுக்குமாடி குடியிருப்பு; பயனாளிகளிடம் ஒப்படைத்த அமைச்சர் 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Minister Anbarasan handed over 504 flats constructed in Neyveli block to the beneficiaries

நெய்வேலி சமத்துவபுரம் அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாரியம் மூலம் ஏழை மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என  தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் மற்றும்  நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் ஆகியோர்  ஊரகத் தொழில் துறை அமைச்சர்  தா.மோ அன்பரசனிடம் கோரிக்கை வைத்தனர். 

இதனையெடுத்து  400 சதுர அடி கொண்ட 3 அடுக்குகளில் 504 குடியிருப்புகள்  ரூ 48.6 கோடி செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டது. அவ்வாறு கட்டப்பட்ட குடியிருப்புகளை  பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே கணேசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான சாவியை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அவர் மாநிலத்தில் குடிசையற்ற வீடுகள் இருக்க வேண்டும் என்ற  நோக்கில் முன்னாள் முதல்வர் கலைஞர் குடிசை மாற்று வாரியத்தை தொடங்கி  விடற்ற ஏழைகளுக்கு  வீடுகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து  தற்போதைய முதல்வர் அத்துறையை நகர்ப்புற வாழ்விடம் மேம்பாடு வாரியம் என மாற்றி தற்போது வீடற்றவர்களுக்கு வீடு வழங்கி வருகிறார். அதை மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த மாவட்டத்தில் ஏழைமக்கள் குடிசை வீடுகளில் மிகவும் மோசமான நிலையை கணக்கில் எடுத்து அவர்களுக்கும் இதுபோன்ற வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேசினார். நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் இப்பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட குடியிருப்புகளை இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். பயனாளிகள் விரைந்து விண்ணப்பித்து வீடுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

Minister Anbarasan handed over 504 flats constructed in Neyveli block to the beneficiaries

மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இத்திட்டம் பயனாளிகளின் பங்களிப்புடன் கூடியது. பயனாளிகள் இந்த மாவட்டத்தை சேர்ந்தவராகவும் தனது பெயரில் பட்டா, வீடு இல்லாமலும்  மாத வருமானம் ரூ 25000 க்கு மிகாமல் இருத்தல்  வேண்டும்.  இதில் மாநில அரசு  ரூ.  6 லட்சமும் மத்திய அரசு  ரூ 1.5 லட்சமும், பயனளி பங்காக ரூ . 2 லட்சம் வரை இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை 105 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 230 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. பயனாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் வங்கிக் கடன் செய்து தரப்படும் என்றார்.

இந்நிகழ்வில் பண்ருட்டி ஒன்றியக் குழு தலைவர் சபா.பாலமுருகன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் பாலமுரளிதரன் உள்ளிட்ட  வருவாய்த் துறையினர் காவல் துறையினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story

என்எல்சி நிறுவனத்தை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
CITU union protest against NLC

நெய்வேலியில் உள்ள என்எல்சி நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு குளறுபடிகளைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் மெயின் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில் கலந்துகொண்ட சங்கத்தின் தலைவர் ஜெயராமன் மற்றும் பொதுச்செயலாளர் அரசு ஆகியோர் போராட்டம் குறித்துப் பேசுகையில், “என்எல்சி நிறுவனத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிலாளர், பொறியாளர், அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியான விடுப்புதான் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் சென்ற மாதம் திடீரென பொறியாளர் - அதிகாரிகளுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ‘ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு’ என்ற நிர்வாகத்தின் இந்நடவடிக்கை தொழிலாளர் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அலுவலகத்தில் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறையை பயன்படுத்துபவர்களை தவிர்த்து சுரங்கம் மற்றும் தெர்மல் பகுதியில் 3 ஷிப்ட் ஆபரேஷனில் பணியாற்றுபவர்களுக்கு 8 நாட்களும், மூன்று ஷிப்ட் மெயின்டணன்ஸில் பணியாற்றுபவர்களுக்கு 7 நாட்களும் மற்ற அனைத்து பகுதிகளுக்கும் 6 நாட்கள் பொறியாளர் - அதிகாரிகளுக்கு மேற்கண்ட விடுப்பு Earn Leave அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு வரை சுரங்கத்தில் பணியாற்றிய ஆப்ரேஷன் தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு 3 நாள், மெயின்டனன்ஸ் மற்றும் NSU, தெர்மல் பகுதி தொழிலாளர்களுக்கு 2 நாள் என C-Off வழங்கப்பட்டு வந்தது. 2015 ஜூன் மாதத்தில் நிறுத்தப்பட்ட பிறகு OH விடுப்பு 5 நாட்கள் தொழிலாளர் - பொறியாளர் - அதிகாரிகளுக்கு சமமாக வழங்கப்பட்டது. C-Off பொறியாளர்களுக்கு கிடையாது.

ஊதிய உயர்வு மற்றும் UIS ஒப்பந்தம் கூட 2017 முதல் தொழிலாளர் - பொறியாளர்-அதிகாரிகளுக்கு ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பொறியாளர் - அதிகாரிகளுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை பர்னிச்சர் கடன் அநியாயமாகும். ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் - பொறியாளர் மத்தியில் வித்தியாசத்தையும், பேதத்தையும் ஏற்படுத்திடும் நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது.

சில மாதங்களுக்கு முன்பு பர்னிச்சர் கடன் கொடுக்கப்பட்டது முதல் இன்று வரை பேச்சுவார்த்தையிலுள்ள சங்கங்கள் வாய்மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்ன? தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள விடுப்பு, பர்னிச்சர் லோன் உள்ளிட்டவைகளை பெறுவதற்கு ஏன் குரல் எழுப்பவில்லை. பேச்சுவார்த்தை சங்கங்களின் இந்த மௌனம் தொழிலாளர்களை வேதனை அடைய செய்துள்ளது.

எனவே இரண்டாம் சனிக்கிழமை விடுமுறைக்கு பதிலாக அளிக்கப்படும் ஸ்பெஷல் அடிஷனல் லீவை 12-ஆக அளித்திடு! பர்னிச்சர் லோன், லேப் டாப், மொபைல் போன் உள்ளிட்ட சலுகைகளை வழங்கிடு! மிகை நேர பணிக்கு சி ஆப் வழங்கிடு என வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் - ஊழியர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

வெளிமாநில இடமாற்றம்: நிறுவனத்தில் தொழிலாளர் - ஊழியர்களை பொறுத்தவரையில் நெய்வேலிக்கு வெளியே இடமாற்றம் செய்யும் நடைமுறை கிடையாது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு 6 பேர் வெளி மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை பேச்சுவார்த்தை சங்கங்கள் தட்டிக் கேட்காமல் இருப்பது மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியாகிவிடும். வரும் காலத்தில் நிர்வாகம் தொழிலாளர்களை வெளி மாநிலங்களுக்கு பந்தாடுவதற்கு வழிவகுத்திடும் என்று சிஐடியு எச்சரிக்கை விடுக்கிறது. 60 ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் நடைமுறையை தொடர்ந்திட வேண்டும் எனவும், போடப்பட்டுள்ள வெளிமாநில இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் சிஐடியு கேட்டுக் கொள்கிறது” என்றார்.