நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகர காவல் நிலைய காவலர்கள் நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியின் உறவினரான சங்கர் மற்றும் தங்கதுரை இருவரும் வாகனத்தில் வந்த போது காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர். அது சமயம் இருவரும் மது, அருந்திவிட்டு வாகனம் ஒட்டி வந்தது தெரியவர, அவர்களைக் காவலர்களான மகேஷ், மகேந்திரன், செந்தில் மூவரும் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
![NELLAI DRING AND DRIVE MINISTER RELATIVE PERSONS POLICE](http://image.nakkheeran.in/cdn/farfuture/O0DZPrqrGEgiCDNFBmcgidmvrP69h3C9ecyuhqm4sMk/1569221839/sites/default/files/inline-images/HOSPITA%3B.jpg)
அப்போது அங்கு வந்த அமைச்சரின் உறவினர்கள் சிலர், பிடிபட்டவர்களை விடச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். காவலர்களோ வழக்கு பதிவு செய்யப்பட்டதைச் சொல்ல, இரு தரப்பினருக்குள் வாக்குவாதம் ஏற்பட மூன்று காவலர்களையும் தாக்கி விட்டு குற்றவாளிகளை மீட்டுச் சென்றுள்ளனர். காயமடைந்த காவலர்கள் மகேஷ், செந்தில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சரின் உறவினர்களே சட்டத்தைக் கையிலெடுத்த சம்பவம் நகரில் பரபரப்பாகியிருக்கிறது. இது தொடர்பாக எஸ்.பி. அருண் சக்திகுமாரிடம் பேசியதில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என்றார். இது குறித்து அமைச்சரின் மாமனாரான வேலுச்சாமியைத் தொடர்பு கொண்ட போது, இதோ லைனில் வருகிறேன் என்றவர். லைனைத் துண்டித்துக் கொண்டார். மெத்துசலா, முப்புடாதி மகன் முருகன் சங்கர், தங்கதுரை, உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.