இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததால், நீட் தேர்வுக்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நீட் தேர்வில் பாடத்திட்டம் வேறாக இருப்பதால் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் குறைவான அளவே தேர்ச்சி பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
![NEET exam - TNGovt - Edappadi Palaniswami Announcement](http://image.nakkheeran.in/cdn/farfuture/nPArjbs-ZIKYuV7MsunWz5MnLoVwrkGlk6fxLPtKxCI/1584772613/sites/default/files/inline-images/111111_195.jpg)
இந்நிலையில் நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைந்தது குறித்து ஆய்வு செய்ய ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று கூறியுள்ள அவர், நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.