Skip to main content

"ஜெ" பாணியில் முதல்வர் எடப்பாடிக்கு நன்றி மழை பொழிந்த கொங்கு மண்டல எம்.எல்.ஏ

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தென்னரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக சட்டமன்றத்தில் இருந்தால் அவர் கட்சியின் எம்.எல்.ஏ.ஒருவர் எப்படி பவ்வியமாகவும் அதே சமயத்தில் வார்த்தைக்கு வார்த்தை அம்மா என்றும், நன்றி என்றும் பேசுவாரோ அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கை கூப்பி வணங்கி விட்டு இப்படி பேசினார்.

 

MLA Thanks to Chief Minister Edappadi in  "J" style


"ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவித்தல்,  ஈரோடு பஸ் நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீனமயமாக்க அனுமதி வழங்கியது. ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கனி மார்க்கெட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்க அனுமதி கொடுத்தால், பெரும்பள்ளம் ஓடையை அழகுபடுத்தி மேம்படுத்த 24 தடுப்பணைகள் அமைத்து மழை நீர் சேகரிப்பு செய்து இருபுறமும் நடை பாதைகள் அமைக்க ரூ 200 கோடி ஒதுக்கியது, இது போன்ற பல்வேறு பணிகளுக்கு அனுமதி கொடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும்  உறுதுணையாக இருக்கும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் மகளிருக்கு என்று அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதைப்போல் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் ஈமச் சடங்கிற்காக முதலில் ரூ 250 வழங்கப்பட்டது. பின்னர் அதை அம்மா முதல்வராக இருந்தபோது ரூ.2,500 ஆக  உயர்த்தி அறிவித்தார். இன்றைய விலைவாசி சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தத் தொகையை உயர்த்தி ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

சென்ற ஆண்டு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வகுப்பறை கட்டி கொடுப்பதற்கு அரசாணை வழங்கப்பட்டது. தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும். ஈரோடு மாநகராட்சி மூலம் தினசரி 220 டன் மக்கும் குப்பை, மக்காத குப்பை சேர்கிறது. காவிரி ஆற்றை மாசுபடுத்திய குப்பைகள் எல்லாம் ஆர்கானிக் மூலம் உரமாக்கி விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 15 டன்  விலை இல்லாமல் உரமாக வழங்கப்படுகிறது. எனவே காவிரி ஆற்றை மாசுபாடு இருந்து காப்பாற்றிய முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

MLA Thanks to Chief Minister Edappadi in  "J" style

 

அதேபோல் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள சட்டமன்ற குடியிருப்பு வளாகத்தில் 20 ஆண்டு காலமாக பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. தற்போது நான் அவை குழு தலைவராக பொறுப்பேற்ற பிறகு எங்கள் குழு சார்பில் பலகோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு நிலுவை தொகை மற்றும்  ஓய்வூதிய பணப்பலன்கள் சுமார் 276 கோடி மதிப்பில் சுமார் ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு 16 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.  அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மக்களின் நீண்ட நாள்  கோரிக்கையை ஏற்று ரூ. 485 கோடி செலவில்  நடைபெற்றுவந்த ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார். அதேபோல் பெருந்துறை ரோடு காளிங்கராயன் இல்லத்திலிருந்து திண்டல் வரை ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம் பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான தொடக்க பணியும் முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என தென்னரசு எம்.எல்.ஏ. பேசினார்.

இதில் வார்த்தைக்கு வார்த்தை முதல்வரை வணங்குகிறேன், நன்றி, நன்றி என்றும் பேசினார். அதேபோல் கொங்கு மண்டல அமைச்சர்களான செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி, வேலுமணிக்கும் தவறாமல் நன்றி சொல்லி விசுவாசத்தை காட்டினாராம் தென்னரசு.

சபையிலிருந்து வெளியே வந்த எம்.எல்.ஏ. தென்னரசுவிடம் "எம்.எல்.ஏ. சார் உங்க பேச்சு ஐஸ் மழை சார்... கூடிய சீக்கிரம் அடுத்த கோட்டா உண்டு'' என கூறினாராம் கொங்கு மண்டல சீனியர் அமைச்சர் ஒருவர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுட்டுப் போயிருக்காரு...” - விஜய பிரபாகரன் உருக்கம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Vijayaprabhakaran campaigned in Virudhunagar

சிவகாசியில் அஇஅதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றிய இந்தக் கூட்டத்தில், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.

“இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம்.  எங்க அப்பா கேப்டன்,  விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒருநாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம். எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுபோச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு. அப்போ இது யாரோட ஆசை, கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு ஆண்டவர் சொல்லிருக்காரு போல.

நிறைய பேர் சொன்னாங்க. விஜய பிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு? பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு . ராமானுஜபுரத்துல தான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்க தான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப் பெருமையா நினைக்கிறேன். கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றிருக்காரு.  என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படணும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது,  அதிமுக எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல.  ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான்,  கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதே மாதிரி  அதிமுகவுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க. எனக்கு உள்ள வரும்போது தேமுதிக, அதிமுக எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன்.

இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள் தான் ஜாஸ்தி.  இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018ல கேப்டன் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல,  அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளரா உங்க முன்னாடி பேசும் போது ரொம்ப சந்தோஷம் அடையறேன். இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு.  அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதனால அந்த வார்த்தை தெரியும்,  சிவகாசிதான் சின்ன ஜப்பான்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா.. அவ்ளோ திறமைசாலிகள் வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க.

இன்னைக்கு சைனா ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வு காண முடியும். அதிமுக - தேமுதிக கூட்டணி முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் கேப்டன் மகனா,  எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.” எனப் பேசி சைகையால் முரசு கொட்டினார் விஜய பிரபாகரன்.

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.