Skip to main content

மெரினாவில் போராட யாருக்கும் அனுமதி தரமுடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
m

 

சென்னை மெரினா கடற்கரையில் போராட யாருக்கும் அனுமதி தரமுடியாது என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின்  முடிவில் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.     

 

விவசாயிகள் நல சங்க தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தீர்ப்பு கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.


 தமிழகத்தில் பாயும் முக்கிய நதிகளான காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.  ஆகவே,  அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில்,  சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, சென்னை மெரினா கடற்கரையில் காவிரி பிரச்சனைக்காக ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, தொடர்ந்து வழக்கை விசாரித்தனர்.    இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில்,  மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு மேல்முறையீடு செய்தார்.   வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இந்த விவகாரத்தில் தமிழக அரசின்  முடிவில் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வர் ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்” -  அய்யாக்கண்ணு

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Ayyakannu said that Cm Stalin should fast for kaveri issue  

 

திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுவாக இன்று அளித்தனர். இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல விவசாயிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, காவல்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மாவட்ட வருவாய் துறை அலுவலர் அபிராமி பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், “காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பது கிடையாது. இதனால் காவேரி டெல்டா விவசாயிகளை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் அல்லது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு வாங்கி காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

 

கடந்த 2021-ம் ஆண்டு குழுமணியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு நியாயம் கேட்டு 24 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவராகிய என் மீது 6 வழக்குகளும், என் சங்கத்தை சார்ந்த விவசாயிகள் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

குறிப்பாக, திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டதை போல என் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடுவதற்காக காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு காரணமான திருச்சி மாவட்ட துணை கமிஷனர் அன்பு மற்றும் காவல்துறையினரை கண்டிக்கின்றோம்” என்றார்.

 

 

 

 

Next Story

மத்திய அரசின் உத்தரவை மதிக்காத வங்கிகள்; விவசாயிகள் கொந்தளிப்பு

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

bank managers disobey union government rules  for farmers loan related issue

 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சார்பில்  திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், "மத்திய அரசின் திட்டங்களான பென்ஷன், மாதம் 500 ரூபாய் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, கைம்பெண் உதவித் தொகை, வயது முதிர்ந்தோர் உதவித் தொகை மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணத்தை அவர்கள் வாங்கிய கடனுக்காகப் பிடிக்கக் கூடாது என்று மத்திய அரசு கூறிய பிறகும்.. 10 லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து விட்டு 10,000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்களுக்காக அந்த தொகைகளைப் பிடிக்கும் வங்கி மேலாளர்களைக் கைது செய்யக் கோரி வங்கிக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்" என்றார்.

 

இதனைத் தொடர்ந்து வங்கிக்கு பூட்டு போட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் பிரச்சனை தொடர்பாக மனு ஒன்று எழுதி வங்கி மேலாளரிடம் கொடுங்கள் என்று வலியுறுத்தினர். இருப்பினும் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் வரை வங்கியில் காத்திருந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வங்கியின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

வங்கியின் மண்டல அதிகாரி விவசாயிகளுக்கு இது குறித்து உரிய பதில் கூறுவதற்கு முன்வராததால் விவசாயிகள் மீண்டும் வங்கியின் வளாகத்திற்குள் நுழைந்து வங்கிக்கு பூட்டு போடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.