Skip to main content

“மருதநாயகத்துக்கு மணிமண்டபம்.! கவிக்கோ பெயரில் இருக்கை.!” - தமிமுன் அன்சாரி  வேண்டுகோள்

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

“Manimandapam for Marudanayakm! Seat in the name of Kaviko! ” - Tamimun Ansari

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் ம.ஜ.க.வின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்தார். அந்நிகழ்ச்சிகளில் ஒன்றாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயற்குழுவில் பங்கேற்ற தமிமுன் அன்சாரி, அதன்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது. சமீப காலமாகத் தமிழகச் சட்டசபையில் நாகரீகமான முறையில் விவாதங்கள் நடைபெறுகிறன. இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைக்கிறோம். சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் கவுரவித்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. மக்கள் கவனத்திற்கு வராத விடுதலை தியாகிகளையும் அரசு சிறப்பிக்க வேண்டும். அந்த வகையில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட மருதநாயகத்தைச் சிறப்பிக்கும் வகையில் அவருக்கு மதுரையில் நூலக வசதியோடு மணிமண்டபம் கட்ட வேண்டும்.

 

தமிழுக்கும், தமிழகத்திற்கும் சிறப்பு சேர்த்த பிரபலங்களில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு, அவருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் அவரின் பெயரால் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கான இருக்கை ஒன்றைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

 

சென்னையில் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் பயன்பாடற்ற முறையில் இருக்கிறது. அதை மக்கள் தொடர்போடு இருக்கும் வகையில் அதில் நூலகம் ஒன்றையும், விழா மண்டபம் ஒன்றையும் அமைக்க வேண்டும்.

 

இதில் கடைசி இரண்டு கோரிக்கைகளும் கடந்த ஆட்சியில் சட்டமன்றத்திலேயே வலியுறுத்தியிருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும் அவர், சில உள்ளூர் கோரிக்கைகள் குறித்தும் பத்திரிகையாளர்களிடம் பேசினார். 

 

அதுமட்டுமின்றி, 2016 ஆம் ஆண்டு ஆம்பூர் கலவர வழக்குகளை மனிதாபிமான அடிப்படையில் அரசு திரும்பப் பெற வேண்டும். ஆம்பூரில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ரெட்டி தோப்பு மேம்பாலப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். ஆம்பூர் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினார். 

 

பிறகு ஆம்பூரில் மரணமடைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து மஜக பிரமுக கபீரின் தந்தை மறைவையொட்டி அவரது வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாநில துணைச்செயலாளர் அப்சர் சையத், மாநில இளைஞரணி செயலாளர் அசாருதீன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆப்பிரிக்கா வானத்தின் நட்சத்திரம் விழுந்தது... யூசுப் அல் கர்ளாவி மரணம்” - தமிமுன் அன்சாரி 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Yusuf Al Garlawi tamimun ansari

 

ஆப்பிரிக்கா தந்த மேதைகளில் ஒருவரும், பன்னாட்டு அறிஞருமான யூசுப் அல்-கர்ளாவி (96) அவர்கள் இன்று மரணமடைந்தார். அவரது இழப்பு ஆழ்ந்த துயரத்தை தருகிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; “ஆப்பிரிக்கா தந்த மேதைகளில் ஒருவரும், பன்னாட்டு அறிஞருமான யூசுப் அல்-கர்ளாவி (96) அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த துயரத்தை தருகிறது. முரண்பாடுகளில் உடன்பாடு என்ற கொள்கையுடன் கருத்து இணக்கத்தை வலியுறுத்தி அவர் எழுதிய நூல்களும், ஆற்றிய உரைகளும் காலம் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாக்கம் உடையவை. 

 

காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அவர் வழங்கிய மார்க்க வழிகாட்டல்களும், இறைத்தூதரின் போதனைகளின் ஊடாக அவர் சுட்டிக்காட்டிய விஷயங்களும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளையும் கடந்து மேலை நாட்டார்களையும் கவர்ந்தது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சிந்தனையாளர்களும், அவர் எடுத்துரைத்த கருத்துக்களை வழி மொழிந்தனர். சமகால சிக்கல்களை எளிதாக அணுகி, பாறைகளை போல தோற்றமளித்த விவகாரங்களில், பனித்துளிகளை போல தீர்வுகளை தந்தவர் என்ற அடிப்படையில் அவரது இழப்பு ஆன்மிக உலகிற்கு பேரிழப்பாகும். 

 

நேர நிர்வாகம், நாம் பிரித்து விட வேண்டாம், முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்.?, திருக்குர்ஆன் கூறும் பொறுமை, இளைஞர்களே... நாங்கள் உங்களிடம்  எதை எதிர்பார்க்கிறோம்.? முரண்பாடுகளில் உடன்பாடு, இஸ்லாம் நடுநிலை மார்க்கம், உள்ளிட்ட இவரது 120 நூல்களின் அணிவகுப்புகள் பிரமிப்புகளை தருபவை.

 

மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, எது முதலில்.? என்ற நூல் மிகப்பெரிய அறிவுக்கொடையாகும். 'சமூக பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜகாத்தின் பங்கு' என்ற இவரின் ஆய்வு கட்டுரை வறுமை ஒழிப்பை பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது. ஃபத்வாக்கள் மற்றும் ஆராயச்சிக்கான ஐரோப்பிய மையத்தை இயக்கியதும், அல்ஜெரியா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளில் அறிவொளி பணிகளை நிறுவனமயப்படுத்தியதும், மார்க்க விவகாரங்களில் சீர்திருத்த அணுகுமுறைகளை மேற்கொண்டதும் இவரது ஆளுமைகளை பறைசாற்றியது. 

 

பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும், சுதந்திர வாழ்வுக்காவும் அவரது இதயம் துடித்த கொண்டே இருந்தது. உலகெங்கும் பரவிய தீவிரவாதத்தையும், தீவிரவாத குழுக்களையும் கடுமையாக எதிர்த்த இவரது துணிச்சலும்  பாராட்டத்தக்கது. Other Side of news என்று உலகை உலுக்கி வரும் அல்ஜெஸீரா பன்னாட்டு ஊடகத்தை உருவாக்கியதில் இவரது பங்களிப்பு அளப்பரியதாகும். இது குரலற்ற மக்களின் குரலை ஒளிபரப்புகிறது. இதன் உருவாக்கத்தில் ஆணிவேராக திகழ்ந்த யூசுப் அல் கர்ளாவியை ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் நன்றியுடன் நினைவு கூறுவார்கள் என்பதில் ஐயமில்லை. 

 

தான் பிறந்த எகிப்து நாட்டில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திட அவர் ஆற்றிய பணிகள் அவரை நாடு துறக்க செய்தது. பிறந்த மண்ணிலிருந்து அகதியாய் செல்ல வழிவகுத்தது. அவர் தொடர்ந்து கத்தாரில் முகாமிட்டு உலகெங்கும் அறிவொளியை சமரசமின்றி, இடையுறாது  பரப்பி வந்தார். அவரது காணொளிகளை வலை தளங்களில் லட்சக்கணக்காணோர் தினமும் கண்டு பயனடைகிறார்கள். மாணவர்களாக மாறி மகிழ்கிறார்கள். இன்று அவர் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார். 

 

ஆப்பிரிக்க வானின் நட்சத்திரம் விழுந்து விட்டது. வளைகுடாவில் ஒளி வீசிய முத்து மீண்டும் சிப்பிக்குள் சென்று விட்டது. ஓரிறை உலகம் ஒப்பற்ற மேதையை இழந்திருக்கிறது. பக்குவமும், முதிர்ச்சியும், இணக்கமான சிந்தனைகளும் நிறைந்த ஒருவரை இழந்த வருத்தம் வாட்டுகிறது. இறைவன் அவரது பிழைகளை மன்னித்து, அவரது மறு உலக வாழ்வு சிறப்புற பிரார்த்திக்கிறோம். ஆறுதலை பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

“ஊடகவியலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்”  - மு.தமிமுன் அன்சாரி

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

“Let's give voice to the democratic rights of journalists” - M. Tamimun Ansari

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனில் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்று நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

 

அந்த வகையில் மஜக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.தமிமுன் அன்சாரி, தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் பின், செய்திகளை புலனாய்வு செய்த 'நக்கீரன்' இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ், ஒளிப்பதிவு கலைஞர் அஜீத் குமார் ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மஜக வன்மையாக கண்டிக்கிறது. ஊடகவியலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.