Skip to main content

தமிழ் சமுதாயம் வெற்றி பெற... மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் பேச்சு...

Published on 18/01/2019 | Edited on 18/01/2019
Seri M. Saravanan



திருப்பூர் வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய தமிழாற்றுப்படை நிகழ்ச்சி ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்றது. மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன், கனிமொழி எம்.பி., ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜ் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.  
 

நிகழ்ச்சியில் பேசிய மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன்,
 

இது சாதாரண ஒரு மேடை அல்ல. தன் வாழ்நாளில் ஒரு கவிஞன், தனக்கு முன்னால் வாழ்ந்த பெருமக்களுக்கும், தன்னுடைய சமகால கவிஞர்களுக்கும் தமிழாற்றுப்படை நடத்துகின்ற உலகத்தில் முதல் நிகழ்ச்சி இந்த தமிழாற்றுப்படைதான். இருக்கின்ற தலைமுறைக்கும், இனி பிறக்கின்ற தலைமுறைக்கும் ஆற்றப்படுகின்ற ஒரு ஒப்பற்ற தமிழாற்றுப்படை இதுமட்டுமாகத்தான் இருக்க முடியும். 
 

ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் இந்த தலைமுறை வாழ்ந்து கொண்டிருக்கிறது. நிகழ்கால தேவைகளையும், எதிர்கால சவால்களையும் உணர்ந்து செயல்படாத எந்த தலைவனும் வெற்றிப்பெற முடியாது. நிகழ்கால தேவைகள் தெரிந்திருக்க வேண்டும். எதிர்கால சவால்களை புரிந்திருக்க வேண்டும். இது இரண்டும் இருந்தால்தான் இந்த தமிழ் சமுதாயம் வெற்றி பெற முடியும். 
 

மஞ்சள் பூசி குளித்த பெண்களை பார்க்கின்ற கடைசி தலைமுறை இது. மயிலிறகு குட்டிப்போடுமென்று புத்தகத்திலே வைத்துவிட்டு ஒவ்வொரு காலையும் அதனை திறந்து பார்த்த கடைசி தலைமுறை வாழ்கின்ற காலம் இது. நவராத்திரி அன்று முதல்நாள் முளைப்பாறியில் வைத்த நவதானியத்தை ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை அன்று பறித்துச் சென்று புத்தகத்திலே வைத்துவிட்டு சரஸ்வதி கல்வி கொடுப்பாள் என்று நம்பிக்கொண்டிருந்த கடைசி தலைமுறை இது. மரணச் செய்தியை தந்தியிலே கேட்ட தலைமுறை இது. காதல் கடிதம் எழுதி காதலித்த கடைசி தலைமுறை இது. இந்த தலைமுறைக்கு சரியான செய்திகள் சொல்ல வேண்டும். இது இன்றைய தேவைகள்.
 

எதிர்கால சவால்கள், இன்னும் ஐம்பது ஆண்டுகளில் 70 சதவீதம் விளைநிலங்கள் நகர்புறங்களாக மாறும். தொழில்நுட்பத்தில் 70 சதவீதம் மறைந்துபோய் அதில் மேம்பாடு அடைந்து புதிய தொழில்நுட்பத்தில் வாழக்கூடிய ஒரு தலைமுறை உருவாகும். உலகின் தட்பவெட்ப நிலை மாறி இன்றைக்கு சூர்ய கதிர்களால் ஆட்கொள்ளப்பட்டு எத்தனையோ பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் 50 ஆண்டுகளில் தட்பவெட்ப நிலை மாறி மிகப்பெரிய சவால்களை சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கும். இன்னும் 50 ஆண்டுகளில் இயற்கை வளங்கள் குறையும். 
 

நாம் இருவர், நமக்கு இருவர் என்ற நிலைமை போய், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலைமை வந்து, நானொரு குழந்தை நீயொரு குழந்தை, ஒருவர் மடியிலே ஒருவரடி என்று பாடி குழந்தைகளே இல்லாமல் வாழுகின்ற நிலைக்கு போய்க்கொண்டிருக்கின்ற காலக்கட்டத்தில் இன்னும் 50 ஆண்டுகளில் வயோதிக சமுதாயம் அதிகம் இருக்கின்ற தலைமுறையாக நாம் இருப்போம். இவைகளையெல்லாம் தாண்டி இன்னும் 50 ஆண்டுகளில் கலாச்சார சீரழிவுக்கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கியவர்களாக நாம் இருப்போம். 
 

இப்போது இருக்கின்ற நமது நடவடிக்கை, எதிர்கால தேவைகளையும் எதிர்கால சவால்களையும் மையமாக கொண்டால்தான் இந்த சமுதாயம் வெற்றியடையும். ஆகவே இதனை மையமாகக்கொண்டுதான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மிகப்பெரிய தமிழாற்றுப்படையை அடுத்த தலைமுறைக்கு தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறார். 
 

அடுத்த தலைமுறை இந்த தமிழாற்றப்படையை படிக்கும்போது, தமிழுக்கு இத்தனை பெருமக்கள் சிறப்பு செய்திருக்கிறார்கள் என்பதை உணரக்கூடிய நிலை ஏற்படும். நமக்கு கிடைத்த மிகப்பெரிய தலைவர்கள் இரண்டு பேர். ஒருவன் வள்ளுவன். திருவள்ளுவருடைய அதிகாரங்களில் மூன்றில் ஒரு பங்கு அமலுக்கு வந்திருந்தாலே உலகத்தினுடைய அதிகாரங்கள் நம்முடைய கைகளில் வந்திருக்கும். ஆனால் திருவள்ளுவர் எம்எல்ஏவாகவோ அல்லது மந்திரியாகவோ ஆக முடியாத காரணத்தினால் அவருடைய கருத்துக்கள் அமலுக்கு வராமலே போனது. 
 

அதற்கு அடுத்து நமக்கு கிடைத்த மிகப்பெரிய தலைவன் பாரதி. சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சொன்னார். பாரதி மட்டும் அமைச்சராக இருந்திருந்தால் சிங்கள தீவுக்கு பாலம் கிடைத்திருக்கும். இவர்களுக்கு அடுத்து இந்த சமுதாயத்திற்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய சொத்து கவிப்பேரரசு வைரமுத்து. ஆனால் நம்முடைய துரதிர்ஷ்டம் எந்த நல்ல கவிஞனையும் நாம் தலைவனாக ஏற்றுக்கொண்டது கிடையாது. இயல், இசை, நாடகம் என்று பேசிக்கொண்டருந்த தமிழருடைய உள்ளத்தில், நான்காவது தமிழாக அறிவியல் தமிழும் இருக்கின்றது என்று சொன்னவர் கவிப்பேரரசு வைரமுத்து. இன்று தமிழாற்றுப்படை ஆற்றிக்கொண்டிருக்கின்றார். கவிப்பேரரசு பற்றி ஒரு சில வரிகள் பகிர்ந்துகொண்டால்தான் பொருத்தமாக இருக்கும்.
 

என்னுடைய பள்ளிக்கூட காலங்களில் கவிப்பேரரசுவை காதலிக்க தொடங்கினேன். எனக்கு தேவைப்பட்ட மொழியை அவர் பேசியதால் புத்தகத்தை புரட்டினேன். காதலித்துப் பார் என்றார். 
 

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம்
விளங்கும்….

உனக்கும்
கவிதை வரும்…
கையெழுத்து
அழகாகும்…..
தபால்காரன்
தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்…

காதலித்துப்பார் என்றார்.
 

அதுதான் எனக்கும் வைரமுத்துக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பு. கண்டதும் காதல். இப்படி எல்லா நிலைகளிலும் அவர் சொன்ன எல்லா வார்த்தைகளையும் பார்த்தீர்கள் என்றால் ஒரு புதிய சக்தியை கொடுக்கும். நான் வாழ்நாளில் நான் அடைந்திருக்கும் சிகரங்களுக்கெல்லாம் வைரமுத்து அவர்கள் கண்ணுக்கு தெரியாத துணையாக என்னோடு வந்திருக்கின்றார். நான் இதனை பல மேடைகளில் சொல்லியதுண்டு. 
 

கடல் கடந்து வந்த ஒரு தமிழன் சொல்கின்றேன். அறிவியல் தமிழை சொன்ன தமிழன் வைரமுத்து. என்னுடைய இருபது வயதில் வைரமுத்து சொல்கின்றார்.
 

இருபதுகளில்…

எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு…

ஜன்னல்களை திறந்து வை..

படி.. எதையும் படி… வாத்சாயனம் கூடக் காமம் அல்ல-கல்விதான் படி…

உன் சட்டைப் பொத்தான் கடிகாரம் காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம் விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்..

சப்தங்கள் படி சூழ்ச்சிகள் அறி

பூமியில் நின்று வானத்தைப் பார் வானத்தில் நின்று பூமியைப் பார்…

உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி

காதலை சுகி காதலில் அழு..

இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி

வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

முப்பதுகளில்….

சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு…

உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்

உட்கார முடியாத ஒருவன் உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்.. கைப்பற்று…

ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே…

எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி…

வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு..

கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு…

நிலைகொள்.

நாற்பதுகளில்…

இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்

செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி

எதிரிகளை ஒழி..

ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு

பொருள் சேர்

இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு

பகல் தூக்கம் போடு

கவனம்.. இன்னொருக் காதல் வரும்.. புன்னகை வரைப் போ புடவை தொடாதே..

இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு..

இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு…

ஐம்பதுகளில்…

வாழ்க்கை- வழுக்கை இரண்டையும் ரசி

கொழுப்பை குறை.. முட்டையின் வெண்கரு காய்கறி கீரைகொள்

கணக்குப்பார்

நீ மனிதனா என்று வாழ்கையைக் கேள்..

அறுபதுகளில்….

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது.. இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்..

விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு..

மனிதர்கள் போதும்

முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு

மனைவிக்குப் பேன்பார்

பழைய டைரி எடு.. இப்போதாவது உண்மை எழுது..

எழுபதுகளில்…

இந்தியாவில் இது உபரி..

சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ

ஜன கண மன..!!!
 

நான் இன்னும் ஐம்பதை தாண்டி போகவில்லை. ஆக இப்படி எல்லா நிலைகளிலும் என்னோடு துணை நின்று கண்ணுக்கு தெரியாத வழிகாட்டியாக, ஒரு கண்ணுக்கு தெரியாத தலைவனாக, ஒரு மானசீட குருவாக எல்லா நிலைகளிலும் நிற்கின்றார் என்றால் அது வைரமுத்து அவர்கள். ஏன் இதனை நான் இங்கே சொல்கிறேன் என்றால், இங்கு பாடுபொருள் கவிக்கோ அவர்கள். அந்த பாடுபொருளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றால், அதனை பாடுகின்றவர் உயர்ந்த நிலையிலே இருக்க வேண்டும்.  எல்லா தமிழையும் நமக்கு கொடுத்த அற்புதமான வைரமுத்து ஆற்றுகின்ற தமிழாற்றுப்படை இருக்கின்ற தலைமுறைக்கல்ல, இனி பிறக்கின்ற தலைமுறைக்கும் ஒரு அற்புத பதிவாக இருக்கும். அதனை ஒவ்வொரு தமிழனும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பேசினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.