மதுரையில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் மற்றும் ஜெயலலிதா சிலையை அகற்ற கோரியும், சுந்தரலிங்கனாருக்கு சிலை அமைக்க அனுமதி மறுத்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனாருக்கு, மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே சிலை அமைக்க, மதுரை மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசு, மதுரை மாநகராட்சி, மதுரை மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம் அனுமதி கோரியிருந்தனர். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த அப்போதைய மாவட்ட ஆட்சியர், சிலை அமைக்க அனுமதி அளிக்கும்படி, தமிழக அரசுக்குப் பரிந்துரைத்திருந்தார்.
![madurai district jayalalithaa and muthuramalinga thevar statues chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/gCjjhihMf80Vl5mgRtRgXb3hmJ8YWgUkBVLiYFtNSK8/1578368817/sites/default/files/inline-images/CHC1_31.jpg)
இந்தப் பரிந்துரை மீது தமிழக அரசு முடிவெடுக்காமல், மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடம் அறிக்கை கேட்டுள்ளது. அவர், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு எனக் கூறி ஒப்புதல் அளிக்காததால், சிலை வைக்க அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தீண்டாமை உணர்வுடன் சுந்தரலிங்கனார் சிலை வைக்க அனுமதி மறுத்து பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் கே.சி.செல்வகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முத்திராமலிங்கத்தேவர் சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.