![perungudi seventeen years old girl child marriage incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/7SDEQ6z6kAPOU8rs__NN3GBqYzblXSpaJwXrPUz48WM/1679304320/sites/default/files/inline-images/01%20art%20hand%20cop_26.jpg)
சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் மதுராந்தகம் நாகமலை கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் (வயது 22) என்பவரும் காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது சிறுமியின் வயது 17 தான் என்பதால் சட்டப்படி இது குழந்தை திருமணம் என்றாலும் இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்றதால் வெளியில் தெரியாமல் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
கடந்த 16 ஆம் தேதி சிறுமிக்கும் அவரது மாமியாருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் சரத்குமார் சிறுமியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அப்போது, இன்னும் சில தினங்களில் வந்து தன்னுடன் அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் அன்றாடம் வேலைக்குச் செல்லும் நிலையில், வீட்டில் தனியாக இருந்ததுடன், மனமுடைந்து காணப்பட்ட சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிறுமிக்கும் மாமியாருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவதுடன், மாமியார் சிறுமியை கொடுமை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் கணவர் மற்றும் மாமனார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாமியாரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 17 வயதில் திருமணம் செய்து கொண்ட சிறுமி ஒருவர் திருமணமான 9 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.