Skip to main content

கஜா புயல் தாக்கி 50 நாட்கள் கடந்தும் இயல்பு நிலைக்கு திரும்பாத கிராமங்கள்..

Published on 07/01/2019 | Edited on 07/01/2019

கஜா புயல் தாக்கி 50 நாட்கள் கடந்தும்கூட முற்றிலும் பாதிக்கப்பட்ட கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட 100 கிராமங்களில் மக்கள் இயல்வு நிலைக்கு திரும்பவில்லை.
 

kk

 


 நவம்பர் 16-ம் தேதி அதிகாலை டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலை போல, 1952-ம் ஆண்டும் ஒரு புயல் தாக்கி ஒட்டுமொத்தமாக அனைத்தையும் அழித்துவிட்டு போய் இருக்கிறது. என்பதை புள்ளாண்விடுதி நாட்டுப் புறப் பாடகர் நடேசக்கோனார் என்ற கிராமத்து கவிஞர் பாடல் வரிகளாக எழுதிவைத்திருக்கிறார். 

 


அப்போதும் இதேபோல மணிக்கு 80 மைல் வேகத்தில் தாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள, பெயர் சொல்லப்படாத அந்தப் புயலின் கோரம் இன்றைய கஜாவின் கொடூரத்திற்கு சற்றும் குறைவில்லை. அப்படியே ஒன்றி வருகிறது.  

 

நந்தன ஆண்டு கார்த்திகை மாதம் 15-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ... அந்தப் புயல் தாக்கியதாக பாடல் தொடங்குகிறது. 
"மாங்காய் காய்ச்ச மரமெல்லாம் மலைமலையாய்ச் சாய்ஞ்சுதே 
தேங்காய் காய்ச்ச மரமெல்லாம் தேருத்தேராச் சாய்ஞ்சுதே 
பாட்டன்வச்சுக் காய்ச்சுதே பலாவும்வேம்பும் போச்சுதே
பாட்டன்வச்சுக் காய்ச்சுதே புளியந்தோப்பும் போச்சுதே.."  

 

என்று பாடல் விரிவடைகிறது. மா மரம், தென்னை, பலா, புளியமரம், சவுக்கு, முருங்கை, வாழை, பனை, கருவை மரம், கரும்பங் கொல்லை, ஈச்சமரம், வேலா மரம் உள்ளிட்ட அத்தனை மரங்களும் சாய்ந்து விட்டதாக நடேசக்கோனார் எதுகை மோனையில் வரியமைத்துப் பாடியுள்ளார்.


  
"சோலையான சவுக்கெல்லாம் தூருத்தூராச் சாய்ஞ்சுதே 
சாலைநீள மரமெல்லாம் சாருச்சாராய் சாய்ஞ்சுதே..."  
என்று சொல்லி வரும் கவிஞர்.. பேசும் படக் கொட்டகை, ரயில் தண்டவாலம் அத்தனையும் போய்விட்டதாகவும், மறமடக்கி சந்தைக்கு போனவர் செத்தார். மாங்காடு தோட்டத்தில் காவல் காரரும் மடிந்தார். அம்மையாண்டி கண்டிக்குளத்தில் குருவிக்காரர்கள் 2 பேர் காணவில்லை. ஒட்டங்காட்டில் ரைஸ்மில் சுவரோரம் ஒன்டிய 10 பேரில் 9 பேர் மடிந்தனர் என்று அத்தனை அழிவுகளையும் அப்படியே பதிவு செய்திருக்கிறார்.

 

kk

 

பழைய பதிவுகளை பார்க்கும் போது பாட்டன் வைத்த புளியமரங்களும் சாய்ந்தது என்ற வரிகள் அதற்கு முன்பு புளிய மரங்களை சாய்க்கும் புயலை அந்த மக்கள் கண்டதில்லை என்பதை காட்டுகிறது. அதன் பிறகு தற்போது அந்த கோரதாண்டவத்தை காணமுடிந்துள்ளது.

 


தென்னை, தேக்கு, வாழை, பலா என்று சரம் சரமாய் சாய்ந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்ற வழியின்றி விழிபிதிங்கி இன்றும் நிற்கிறார்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கு மரம் அறுக்கும் நவீன இயந்திரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால், கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் எந்த விவசாயிக்கும் இதுவரை அரசு இயந்திரம் கிடைக்கவில்லை. வெட்டிய மரங்களை எங்கே கொண்டுபோய் கொட்டுவது எப்படி அழிப்பது என்று 80 சதவீதம் தோட்டங்களில் தென்னை மரங்கள் அப்படியே கிடக்கிறது.

 

50 நாட்களாகியும் இன்னும் விவசாயிகளுக்கு மரங்களுக்காண நிவாரணம் கிடைக்கவில்லை.
தென்னை மட்டுமின்றி பலா மரங்கள் ஆலங்குடி தொகுதி மக்களின் வாழ்வாதாரம். அந்த மரங்கள் அடியோடு சாய்ந்து கிடப்பதால் நிம்மதிய இழந்து நிற்கிறார்கள் விவசாயிகள். வடகாடு, மாங்காடு, புள்ளாண்விடுதி, அணவயல், உள்ளிட்ட பல கிராமங்களில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு வீட்டிலும் அனைவரையும் பட்டதாரிகளாக ஆக்கி வாழ வைத்தது வாழை. ஆனால் ஒரு மணி நேரத்தில் அத்தனை வாழைகளும் தரைமட்டமானதால் அதேபோல உடைந்து நிற்கிறார்கள் விவசாயிகள். எப்படி மீண்டு எழுவோம் என்ற வார்த்தைகள் அவர்களிடம் வெளிப்படுகிறது.

 


தென்னை, தேக்கு, பலா என்று மரங்கள் அத்தனையும் தோட்டங்களில் வீழ்ந்து கிடப்பதால் அவற்றை வெட்டி அகற்ற முடியாமல் மறு விவசாயத்திற்கு விவசாயிகள் தயாராக முடியாமலும் தவிக்கின்றனர். ஆழ்குழாய் பாசனம் வந்து 30 வருடங்களாகிவிட்டது. ஆனால், அதற்காண மின்சாரம் இருந்தால் மட்டுமே விவசாயம். புயலின் தாக்கத்தால் மாவட்டம் முழுவதும் சுமார் 90 ஆயிரம் மின்கம்பங்கள் உடைந்து சாய்ந்தது. மின்மாற்றிகளும் உடைந்தது. தற்போதுவரை வீடுகளுக்காண மின்சாரம் 95 சதவீதம் வழங்கப்பட்டு இருந்தாலும் விவசாயத்திற்கான மின்சாரம் 50 சதவீதம் கூட வழங்கப்படவில்லை. அதனால் எஞ்சிய பயிர்களை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு விவசாயியும் தங்கள் தோட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுக்கு மின்சாரம் கொண்டு செல்ல மின்கம்பம் ஏற்றவும், மின்கம்பி உள்ளிட்ட மின்சார உபகரணங்கள் ஏற்றவும், மின்கம்பங்களை நட மின் ஊழியர்கள் சம்பளம், உணவு என்று சராசரியாக ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி செலவு செய்து கொண்டு போன மின்சாரம் 50 சதவீதம். மற்ற 50 சதவீதம் மின்சாரம் கொண்டு செல்ல ஒவ்வொரு விவசாயியும் கையில் பணமில்லாமல் தவித்து வருகின்றனர்.


    

வீடுகளுக்கு மின்சாரம் கொடுக்க சாலை ஓரங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் நல்ல நிலையில் இருந்த தெருவிளக்குகளுக்கு இணைப்பு கொடுத்துவிட்டார்கள். அந்த விளக்குகள் இரவு பகலாக எரிகிறது. ஆனால், அனைத்து கிராமத்திலும் தெருவிளக்குகள் பொருத்தும் பணியை இன்னும் ஊராட்சி நிர்வாகங்கள் செய்ய தொடங்கவே இல்லை. அதனால் மின்சாரம் இருந்தாலும் அனைத்து சாலைகளும் இருளில் தான் உள்ளது.

 

k

 

 

வீடுகள், மரங்கள், விவசாயங்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு நிவாரணம் கிடைக்கும் என்று அரசு அறிவித்தாலும் கஜா புயலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 2.17 லட்சம் வீடுகள் சேதமடைந்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஆனால் 1.10 லட்சம் பேருக்கே நிவாரணம் பொருட்கள் வழங்கி வருகிறார்க்ள. அதனால் ஒவ்வொரு கிராமத்திலும் நிவாரணப் பொருள் வழங்கும் நாளில் சாலை மறியல், முற்றுகை போன்ற போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. அந்த நிவாரணப் பொருட்களில் தார் பாய் இல்லை. வேட்டி சேலைகளும் பலருக்கு பொங்கலுக்கு அரசு வழங்கும் வேட்டி சேலைகளே உள்ளது. மேலும் வீடுகள் உடைந்தவர்கள், மரங்களை இழந்தவர்கள் நிவாரணத் தொகை வரும் என்று காத்திருக்கிறார்கள்.


    

இந்த நிலையில் 1952 புயலில் அத்தனை மரங்களை இழந்த எங்கள் முன்னோர் எங்களுக்காக மறுபடியும் மரங்களை வைத்து வளர்த்து வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதே போல கஜா புயலால் அனைத்து மரங்களையும் இழந்து நிர்கதியாக நிற்கிறோம். அடுத்த சந்ததிக்காக மீண்டும் மரங்களை நட வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் இழந்த மரங்களை மீட்டெடுப்போம் என்று அணவயல், சேந்தன்குடி உள்ளிட்ட அனைத்து கிராம இளைஞர்களும் பொது இடங்களில் புதிய மரங்கன்றுகளை நடும் பணியை தொடங்கி உள்ளனர். புளி, வேம்பு, புங்கன் போன்ற மரக் கன்றுகளுடன் ஆலமரம், அரச மரம் போன்ற மரங்களின் கிளைகளை நடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். விரைவில் பல லட்சம் மரக்கன்றுகளை கீரமங்கலம் பகுதி இளைஞர்கள் நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளனர்.

 

50 நாட்கள் கடந்தும்கூட கீரமங்கலம், உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பவில்லை. அவர்கள் மீண்டு வர விவசாயிகளுக்கு உதவியாக உடனடியாக மும்முனை மின்சாரமும் தோட்டங்களில் வீழ்ந்து கிடக்கும் மரங்களை அகற்ற நவீன இயந்திரங்களும் வழங்குவதுடன் அவற்றை அப்புறப்படுத்த உடனடியான நிவாரணமும் வழங்கினால் இன்னும் சில மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

புதிய மின் பாதைக்காக அழிக்கப்பட உள்ள சாலையோர மரங்கள்... போராடத் தயாராகும் சமூக ஆர்வலர்கள்!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Roadside trees to be cleared for new power line ... Community activists ready to fight!

 

மின்பாதைகள் அமைப்பதற்காக சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழகத்தில் கஜா புயல் தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல கோடி மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதில் சாலையோரத்தில் நின்ற பலநூறு வருட மரங்களும் அடக்கம்.

 

இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கிரீன் நீடா, கைஃபா, மரம் அறக்கட்டளை உள்ளபட ஏராளமான தன்னார்வ அமைப்புகள் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

 

tree

 

மற்றொரு பக்கம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். தற்போதுகூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காலநிலை மாற்றங்களை சமாளிக்கவும் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குருங்காடுகள் உருவாக்கும் திட்டங்களை அமைச்சர் மெய்யநாதன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகள் நடுவதும் மரக்கன்றுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இப்படியான நிலையில்தான் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறை பல மரங்களை அகற்றுவது மட்டுமின்றி புதிய மின்பாதைகள் அமைப்பதாக கூறி மரங்களையும் அகற்றி வருகின்றனர்.

 

இதனால் சாலைப் பணியாளர்களின பல வருட உழைப்பு வீணாகிறது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்து வரும் நிலையில் தற்போது மரக்கன்றுகளுக்கு மேலே மின்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கன்றுகள் வளரும்போது மின்கம்பிகளில் உரசும் என்பதால் அந்த மரக்குழந்தைகளை வெட்டி அகற்றவும் உள்ளனர்.

 

சில மின்கம்பங்களுக்காக பல நூறு மரக்குழந்தைகளை அழிப்பதை விட 10 தூரம் சில மின் கம்பங்களை மாற்றி நட்டால் போதும் மரங்கள் பாதுகாப்பாக வளரும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் இருக்கும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள் மின்கம்பங்களை மாற்றி நடாமல் மரக்கன்றுகளை அகற்ற முயன்றால் போராடவும் தயாராக உள்ளோம் என்கிறார்கள்.