ஒரு காலத்தில் அதிமுகவின் அதிகார மையமாக இருந்து வந்த மன்னார்குடியின் பாஸ் என்று அழைக்கப்பட்ட திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் திருமணம், பிரபலங்கள் பெரிய அளவில் கலந்து கொள்ளாமல் முடிந்திருந்தாலும், யாரும் எதிர்பார்க்காத சம்பவங்கள் திருமணத்தில் நிகழ்ந்தன.

அவற்றில் ஒன்றுதான் திருமண விழாவில் கலந்து கொண்ட நாகை எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரியும், திருக்கடையூரைச் சேர்ந்த பிரபல வேதவிற்பன்னர் மகேஷ் குருக்களும், அவரது சகோதரர் கணேஷ் குருக்களும் குடும்ப நலம் விசாரித்து கைகுலுக்கிய சம்பவம்.
இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் போராட்டங்கள், வன்முறைகள், உயிர்பலிகள் என வெடித்து வரும் வேளையில் திருமண விழாவில் இரு மதத்தின் முக்கிய பிரமுகர்களும் சகஜமாக பேசிக்கொண்டது அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் அறுபதாம் கல்யாணத்திற்கு புகழ்பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது. அந்த கோயிலின் முக்கிய வேதவிற்பன்னராக இருப்பவர்கள் கணேஷ் குருக்களும், அவரது சகோதரர் மகேஷ் குருக்களும். இவர்கள் மன்னார்குடி குடும்பத்தினரோடு மிக நெருக்கம் கொண்டவர்கள். ஆளுநர்கள், தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட விவிஐபிகள் அனைவரோடும் நெருக்கமாக இருப்பவர்கள், இதைவிட பாஜகவோடும், இந்துத்துவ அமைப்புகளோடும் அதிக நட்பு வைத்திருப்பவர்கள்.
அதுபோல, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்க்கும் முக்கியமானவர்களில் ஒருவர் தமிமுன் அன்சாரி. இவர்கள் மதங்களை கடந்து, பெயரைச் சொல்லி கை குலுக்கிப் பேசி, குடும்ப நலம் விசாரித்துக் கொண்டனர்.
"மதங்களை கடத்து அன்பாக பழகுவதும், பரிமாறிக்கொள்வதும் பகுத்துண்டு வாழ்வதும்தான் தமிழனின் பண்பாடு, இது தமிழனுக்குத் தெரியும் டெல்லிக்கு தெரியாது" என்கிறார்கள் திருமணத்தில் கலந்துகொண்டவர்கள்.