
இன்று (28.01.2021) காலை போயஸ் கார்டனில் உள்ள 'வேதா இல்லம்' அரசுடைமையாக்கப்பட்டு 'ஜெயலலிதா நினைவு இல்லம்' என மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி இல்லத்தை திறந்து வைக்க, துணைமுதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிலையில் தற்போது, சென்னை கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் லேடி வெலிங்டன் கல்லூரியிலுள்ள உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டி, அங்கு அமைக்கப்பட்டுள்ள 9 அடி உயரம் கொண்ட ஜெலலிதாவின் வெண்கல சிலையை முதல்வரும், துணை முதல்வரும் திறந்து வைத்தனர். ட்ரோன் மூலம் சிலை திறந்துவைக்கப்பட்டு மலர் தூவப்பட்டது.
அப்பொழுது, விழா மேடையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும்’ என அறிவித்தார். ‘தற்பொழுது திறக்கப்பட்டுள்ள சிலைக்கு அரசு விழாவின்போது மரியாதை செலுத்தப்படும்’ எனவும் அறிவித்தார்.