
இருசக்கர வாகனம் உரசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்துள்ளது சுண்ணாம்பு கால்வாய் பகுதி. இந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர் அசாருதீன். நேற்று சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அசாருதீன் மீது அசார் என்ற நபரின் இருசக்கர வாகனம் உரசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அசாருதீன் தரப்பிலும் அசார் தரப்பிலும் இளைஞர்கள் கும்பலாக சுண்ணாம்பு கால்வாய் பகுதிக்கு நேற்று இரவு வந்துள்ளனர்.
பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் முற்றியதால் கைகலப்பு ஏற்பட்டது. இதில் காய்கறி வியாபாரி அசாருதீனை கத்தியால் வயிற்றில் குத்தி உள்ளனர். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அசாருதீனுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதன்படி அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அசாருதீன் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து கோவை குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையில் ஈடுபட்ட ஆறு பேரை தேடி வருகின்றனர்.