Skip to main content

கரோனாவில் இறந்த மூதாட்டியின் உடலை நடுரோட்டில் வைத்து மறியல்! தேனியில் பரபரப்பு!!

Published on 08/08/2020 | Edited on 08/08/2020
Incident in theni

 

 

கரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

 

தேனி அருகே உள்ள நல்ல கருப்பன்பட்டியை சேர்ந்த 62 வயது மூதாட்டி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டார். உடனே அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் கரோனா தொற்று உள்ளதா என கண்டறிய அவரிடம் இருந்து சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

 

இந்நிலையில் நேற்று காலை அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி திடீரென இறந்தார். இதையடுத்து மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முழு கவசஉடை சுற்றப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே உடல் ஒப்படைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அந்த மூதாட்டிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதையறிந்த உறவினர்கள் மூதாட்டியின் உடலை ஊருக்கு எடுத்து செல்லாமல் அரசு மருத்துவமனை முன்பு நடுரோட்டில் வைத்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

இதுபற்றி உறவினர்கள் கூறும்போது, “இறந்த மூதாட்டிக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. டாக்டர்களுக்கு பதிலாக மருத்துவ மாணவர்களை வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். மூதாட்டிக்கு கரோனா இருப்பதை முன்கூட்டியே எங்களுக்கு தெரிவிக்கவில்லை. அவ்வாறு கரோனா பாதிப்பு இருக்கும் பட்சத்தில் உடலை ஏன் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றனர்.

 

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து தாங்களே உடலை அடக்கம் செய்து கொள்வதாக கூறி மூதாட்டியின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு உறவினர்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இப்படி கரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை நடுரோட்டில் வைத்து மறியல் செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்