Skip to main content

'இதயம் காப்போம்' நிகழ்ச்சி; விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி மாநகர காவல் ஆணையர்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

திருச்சி மாநகரில் பணியாற்றும் காவல்துறையினருக்கு 'இதயம் காப்போம்' நிகழ்ச்சியில் இதயத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

 

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா, திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகரில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

 

இன்று (17.06.2023) காலை 10 மணியளவில் ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொராய்ஸ் சிட்டி ஆடிட்டோரியத்தில் திருச்சி காவேரி பல்நோக்கு மருத்துவமனை சார்பில் திருச்சி மாநகரத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்சியில் தலைசிறந்த இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் மூலம் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா தொடங்கி வைத்தார்.

 

மேற்கண்ட நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர்கள் (தெற்கு, வடக்கு), உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் என சுமார் 400 பேர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் திருச்சி காவேரி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை சார்பில் தலைமை இதய நோய் மருத்துவ நிபுணர் மற்றும் இதய நோய் ஆலோசகர் மருத்துவர் அரவிந்தகுமார் மற்றும் மருத்துவர் ஆண்ட்ரூஸ் தாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

 

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் பேசுகையில், ''திருச்சி மாநகரில் பணியாற்றும் காவல்துறையினர் யாரும் இதயநோயால் பாதிக்கப்படாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். முறையான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதய நோயை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தடுப்பு மாத்திரையை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும்'' என்றார்.

 

மருத்துவர் அரவிந்தகுமார் அவர்கள் பேசுகையில், “நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இதயத்தை பாதுகாக்க சரியான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டும். ஆண்டுக்கு ஒருமுறை இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாரடைப்பு ஏற்படும் போது உட்கொள்ள வேண்டிய உயிர்காக்கும் அவசரகால மாத்திரைகளை எப்போதும் தங்கள்வசம் வைத்திருக்க வேண்டும்'' என அறிவுரைகள் வழங்கினார்.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கூறுகையில், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாநகர காவல் ஆணையருக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள். மேலும், காவலர்கள் நலன் பேணும் வகையில் திருச்சி மாநகரில் இதுபோன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்