கரோனா தடுப்பிற்கான ஊரடங்கு உத்தரவின் காரணமாக, தொலைபேசி மூலம் வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை உயர் நீதிமன்றமும் மூடப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவர்கள் தாக்கல் செய்துள்ள அவசர வழக்குகளையும், ஏற்கனவே பெற்ற ஜாமீனில் நிபந்தனையை தளர்த்தக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்குகளை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா விசாரித்தார். நீதிபதி தன் வீட்டில் இருந்தபடி விசாரித்து, அரசு குற்றவியல் வழக்கறிஞரின் கருத்துகளை தொலைபேசியில் பெற்று வழக்குகளில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி பட்டியலிடப்பட்ட 58 வழக்குகளில் கொலை, கொலை முயற்சி, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய 23 பேருக்கு ஏப்ரல் 27-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்குவதாகவும், சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் இவர்களை விடுவிக்க வேண்டுமெனவும் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பெற்ற நிபந்தனை ஜாமீனில் நிபந்தனைகளை தளர்த்தியும் 3 பேருக்கு அனுமதி அளித்துள்ளார்.