Skip to main content

சுட்டுக்கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்களை மேலும் 4 நாட்கள் பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

கேரளா அட்டப்பட்டி அமைதி பள்ளத்தாக்கில் நக்சல்சல்கள் தங்கி இருந்ததாக போலீசார் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கேரள போலீசார் கூறினார்கள். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த  மணிவாசகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் பகுதியை சேர்ந்த முத்து மகன் கார்த்தி என்கிற கண்ணன் என்பதும் அடையாளம் காணப்பட்டதாக அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

 

 HC ordered to protect bodies for a further 4 days

 

ஆனால் தகவல் கொடுத்து அடையாளம் பார்க்க அழைக்கப்பட்டாலும் உறவினர்கள் அடையாளம் பார்க்கும் முன்பே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகும் சடலங்களை பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை என்றும், எனவே சடலங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் உறவினர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி சடலங்களைப் உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் 4 ந் தேதி வரை சடலங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கண்ணன் என்கிற கார்த்திக்கின் அண்ணன் முருகேசனிடம் காட்டப்பட்ட சடலத்தைப் பார்த்து அந்த சடலத்தில் கண்கள் இல்லை, முகம் சிதைந்துள்ளது அதனால் இது என் தம்பி தானா என்ற சந்தேகம் எழுகிறது அதனால் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட படங்களை காட்டினால் அடையாளம் பார்க்கலாம் என்று கூறினார். ஆனால் புகைப்படங்களை முருகேசனிடம் காட்ட விரும்பாத போலீசார் இதற்கு முன்பு கைதானபோது எடுக்கப்பட்ட கைரேகை பதிவுகளை வைத்து சரி பார்த்த பிறகுதான் அது கண்ணன் என்கிற கார்த்திக் உடல் என்பதை உறுதி செய்துவிட்டதாக முருகேசனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் மோதல் நடக்கும் போதும் அதன் பிறகும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய கேரளா உயர்நீதிமன்றத்தை உறவினர்கள் நாடிய நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரணையில் மேலும் 4 நாட்கள் வரை உடலை பாதுகாக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

எங்களுக்கான சந்தேகங்கள் தீர்க்கப்பட்ட பிறகே சடலங்களை வாங்குவோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கேரள போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.