
தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராகவும், மூவேந்தர் முன்னேற்ற கழக ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார் ஜெயக்குமார். கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந் தேதி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா சமையன்குடிகாடு கிராமத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தஞ்சை முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகும்படி ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று கோர்ட்டில் ஜெயக்குமார் ஆஜரானார். அப்போது அவர் தனது வலது பக்க மீசையை எடுத்து விட்டும், வலது பக்கம் பாதி மொட்டை போட்ட நிலையில் கோர்ட்டுக்கு வந்து இருந்தார். இதனால் கோர்ட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கு ஜூலை 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், என் மீது புகார் கொடுத்தவர் யார் என்றே எனக்கு தெரியாது. அவர் கருப்பா? சிவப்பா? என்று கூட தெரியாது. ஆனால் அவரை சாதியை சொல்லி தாக்கியதாக என்னை போலீசார் கைது செய்தனர். பட்டுக்கோட்டை கிளை சிறையில் 12 நாட்கள் இருந்தேன். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து 1 மாதம் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டேன். ஒரு சாதியினருக்கு எதிராக நான் செயல்பட்டது போல் என் மீது போலீஸ் அதிகாரிகள் பொய் வழக்கு போட்டனர்.
இந்த பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். பொய் வழக்கு போட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசு, கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான், பாதி மொட்டை அடித்து கொண்டு, பாதி மீசையையும் எடுத்து விட்டு வந்தேன். ஆனால் கோர்ட்டில் இதுகுறித்து யாரும் எதுவும் கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.