Skip to main content

எச்.ராஜாவின் அநாகரிகமான பதிவு, கவர்னருடைய நடவடிக்கைகள்  காவிரி விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் முயற்சி! -ஸ்டாலின்

Published on 19/04/2018 | Edited on 19/04/2018
mk stalin


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (19-04-2018) கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 68 ல் உள்ள ஜெய்பீம் நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.29.36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையின் புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்தார். தொடர்ந்து, திரு.வி.க.நகரில் சமுதாய நலக்கூடம் கட்டுமானப் பணியை பார்வையிட்டார். மேலும், பங்காரு தெருவில் உள்ள திரு. இளங்கோவன் அவர்களின் இல்லத்தில் புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனையடுத்து, கென்னடி சதுக்கம் 3வது வடக்கு தெருவில் மறைந்த மோகனரங்கம், தீட்டித்தோட்டம் 4வது தெருவில் மறைந்த குமரேசன் (எ) சிவகுமார், 3வது தெருவில் மறைந்த முகமது ஆசாம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு 2 மடிக்கணிணிகள், மகளிருக்கு 12 தையல் இயந்திரங்கள், ஒருவருக்கு திருமண நிதியுதவி, 3 நபர்களுக்கு தள்ளு வண்டிகள், 2 நபர்களுக்கு மீன்பாடி வண்டிகள் மற்றும் 68 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் மற்றும் புத்தாடைகள் ஆகியவற்றை வழங்கினார். அதனையடுத்து, வார்டு எண் 65ல் உள்ள செந்தில் நகரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்ததுடன், வீனஸ் நகரில் உள்ள கழக மாவட்ட பிரதிநிதி சூரி இல்லத்தில் புதுமணத் தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தார்.


 
பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீக்குளித்து, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த, கீரப்பாக்கம் ஊராட்சி திமுக கிளைக்கழக துணைச்செயலாளர்  எஸ்.ரமேஷ்  உடல் நலன் குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் ,  ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

 

 முன்னதாக, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

 
ஸ்டாலின்: கொளத்தூர் தொகுதியில் இன்றைக்கு ரேஷன் கடை திறந்திருக்கிறோம். அதேபோல, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். அதுமட்டுமில்லாமல், சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணியை பார்வையிட்டு, பணிகளை விரைவுபடுத்தினோம்.

 
செய்தியாளர்: தமிழ்நாடு அரசு லோக்பால் அமைக்காததை நீதிமன்றம் கண்டித்து இருக்கிறதே?
 
ஸ்டாலின்: தாங்கள் செய்திருக்கும் ஊழல்கள் வெளியாகி விடும் என்ற பயத்தினால் இந்த அரசு லோக்பால் சட்டத்தை கொண்டு வராமல் இருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் லோக்பால் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து, சட்டமன்றத்தில் நான் பலமுறை கேள்வியெழுப்பிய போதும், லோக்பால் கொண்டு வருவோம் என்று இதுவரை சொல்லவில்லை. இதை உச்ச நீதிமன்றம் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. இனியாவது லோக்பால் கொண்டு வந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்திரவை நிறைவேற்ற வேண்டும்.

 

செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலிருந்து திசைதிருப்ப நிர்மலா தேவி விவகாரம் போன்ற பல பிரச்சினைகள் எழுப்பப்படுகிறதா?

 ஸ்டாலின்: அப்படியொரு சந்தேகமும் இருக்கிறது. எச்.ராஜாவின் அநாகரிகமான பதிவு, கவர்னருடைய நடவடிக்கைகள் ஆகியவற்றை எல்லாம் பார்க்கின்றபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பும் எண்ணத்தில் இவையெல்லாம் நடப்பதாகவே கருதுகிறேன்.

 

செய்தியாளர்: 15வது நிதி ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க நிதியமைச்சர் டெல்லி சென்றிருக்கிறாரே?


ஸ்டாலின்: 15வது நிதி ஆணையத்தின் ஆய்வுக்குழு தொடங்கியபோதே, தென் மாநிலங்களின் முதல்வர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள பல மாநில முதல்வர்களுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் இவர்கள் அதுபற்றி கவலைப்படவில்லை. அதுமட்டுமல்ல, அண்மையில் கேரள மாநில முதல்வர் அவர்கள் தென் மாநில முதலமைச்சர்களை எல்லாம் அழைத்து, இதுகுறித்து விவாதிக்க ஒரு கூட்டம் நடத்தினார். ஆனால், அந்தக் கூட்டத்துக்கு செல்லாமல் தமிழ்நாட்டு முதலமைச்சர் புறக்கணித்தார். இதிலிருந்தே, அவருடைய விருப்பம் என்னவென்று வெளிப்படையாக தெரிந்தது. காலம் கடந்து இப்போது சென்று இருக்கும் நிலையில், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தார்கள் என்று சொல்வது போல, காரியத்தை சாதித்துக் கொண்டு வந்தால் மகிழ்ச்சியடைவேன்.
 

செய்தியாளர்: கவர்னரை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடருமா?

 
ஸ்டாலின்: மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், அவரை திரும்பப்பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். அதற்காக எங்களுடைய போராட்டம் தொடரும்.
 

செய்தியாளர்: தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறதே?
 

ஸ்டாலின்: பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் எந்தளவுக்கு தமிழ்நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதில் யார் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? யார் யார் பின்னணியில் இருக்கிறார்கள்? இதுகுறித்து எல்லாம் உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால், உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால், சிபிசிஐடி விசாரணையை அரசு அறிவித்துள்ளது. அறிவித்த இரண்டு நாட்களுக்குள், சிபிசிஐடி கூடுதல் டிஜிபியை அவசர அவசரமான மாற்றியிருக்கின்றனர். எங்களுக்கு வந்திருக்கும் செய்திகளின்படி, அவர் மிகுந்த நேர்மையானவர், உண்மையை கண்டறிந்து வெளிப்படுத்தக்கூடிய திறமையான போலீஸ் அதிகாரி, என்று அறிகிறோம். எனவே, உண்மைகள் வெளியாகிவிடுமே என்ற அச்சத்திலும், சம்பந்தப்பட்டவர்களை தப்பிக்க வைக்கும் முயற்சியிலும் எடப்பாடி அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இப்படிப்பட்டவர்கள் சட்டம் – ஒழுங்கு பற்றியும், பெண்கள் பாதுகாப்பு பற்றியும் ஏன் கவலைப்படுகிறார்கள்?
 

செய்தியாளர்: நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநர் அமைத்து இன்று தொடங்கும் விசாரணை ஆணையத்தில் நியாயம் கிடைக்குமா?
 
ஸ்டாலின்: நிச்சயமாக கிடைக்காது. ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்களே விசாரணைக்கு உத்திரவிடுவது வேடிக்கையானது. எனவே, உண்மையான விசாரணை நடந்து, நியாயம் கிடைக்க வேண்டுமென்றால், உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !