Skip to main content

சீமான் தொடர்ந்த வழக்கு- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 03/03/2025 | Edited on 03/03/2025

 

'Political ulterior motive?' - Supreme Court imposes interim stay

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக அவர் மீது நடிகை விஜயலட்சுமி  புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் அவர் இந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டார். இருப்பினும், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு கடந்த 17ஆம் தேதி (17.02.2025) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து சம்மன் கொடுக்கப்பட்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 28 ஆம் தேதி சீமான் ஆஜராகி இருந்தார். அதேநேரம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.  உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு முற்றிலுமாக அரசியல் உள்நோக்கம் கொண்டு தொடுக்கப்பட்டுள்ளது என்றும், மூன்று முறை சம்பந்தப்பட்ட நடிகை புகாரை கொடுத்து வாபஸ் பெற்றுள்ளார் என இதேபோன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளைசுட்டிக்காட்டி வாதிட்டார்.

அப்பொழுது 'இழப்பீடு வழங்க ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் தரப்பில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குள் இருவரும் பேசி இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியதோடு, இரண்டு மாதங்களுக்கு இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை தள்ளி வைக்கிறோம். சீமான் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். தமிழக அரசும் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்