Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிபதி சிடுசிடு... எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் அப்செட்!

Published on 20/11/2018 | Edited on 20/11/2018


கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சி சொன்ன குறிப்பிட்ட ஒரு வார்த்தையை சரியாக காதில் வாங்காமல் ஆட்சேபனை தெரிவித்த யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்களை, மாவட்ட முதன்மை நீதிபதி கே.ஹெச். இளவழகன் கடுமையாக எச்சரித்த நிகழ்வு, நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

gokulraj


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. கடந்த 23.6.2015ம் தேதியன்று தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த தோழி சுவாதி என்பவரை பார்க்கச் சென்றார். அதற்கு அடுத்த நாளான 24.6.2015ம் தேதியன்று மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

 

gokulraj

 

இதுகுறித்து ஆரம்பத்தில் திருச்செங்கோடு போலீசார் விசாரித்து வந்தனர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், வேறு சமூகத்தைச் சேர்ந்த சுவாதியுடன் நெருக்கமாக பழகியததால், அவரை மர்ம நபர்கள் சாதி ஆணவக்கொலை செய்திருக்கலாம் என அப்போது தகவல்கள் பரவின.

இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, கார் ஓட்டுநர் அருண், சங்கர் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவரான ஜோதிமணி என்ற பெண், குடும்பத்தகராறின்போது கொலை செய்யப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாகிவிட்டார்.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை ஆகஸ்ட் 30, 2018ம் தேதி முதல், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் முன்னிலையில் நடந்து வருகிறது. விசாரணையின்போது, கொலை குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் ஆஜராகி வருகின்றனர்.

 

gokulraj


இந்நிலையில், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 19, 2018) சாட்சிகள் விசாரணை நடந்தது. பகல் 12.45 மணிக்கு விசாரணை தொடங்கியது. கடந்த 9ம் தேதியன்று அரசுத்தரப்பு சாட்சியாக கூண்டில் ஏற்றப்பட்ட வழக்கறிஞரும், பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளருமான பார்த்திபன், இன்று தொடர்ந்து சாட்சியம் அளித்தார்.

கடந்த 24.6.2015ம் தேதியன்று வேறு ஒரு வழக்கு தொடர்பாக பார்த்திபன், திருச்செங்கோடு காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தார். அன்று, கோகுல்ராஜ் மாயமானது தொடர்பாக புகார் கொடுப்பதற்காக அவருடைய தாயார் சித்ரா, அண்ணன் கலைச்செல்வன், கோகுல்ராஜின் தோழி சுவாதி, சுவாதியின் நண்பர் கார்த்திக்ராஜா ஆகியோரும் அதே காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர்.

காவல் ஆய்வாளர் விசாரணையின்போது சுவாதி, கார்த்திக்ராஜா ஆகியோர் கூறிய தகவல்களை, ஒரு வழக்கறிஞராகவும், கோகுல்ராஜை தனிப்பட்ட முறையில் அறிந்தவர் என்ற அடிப்படையிலும் அருகில் இருந்து பார்த்திபனும் கேட்டுக்கொண்டார்.

 

 

gokulraj


திருச்செங்கோடு மலைக்கோயிலில் சுவாதியும், கோகுல்ராஜூம் சாமி கும்பிட்டு விட்டு பேசிக்கொண்டிருந்தபோது, யுவராஜ் அழைத்ததாகச் சொல்லி ஒருவர் வந்து கோகுல்ராஜை அழைத்ததாகவும், பின்னர், பச்சை, சிவப்பு நிறக்கொடி கட்டப்பட்ட, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்று எழுதப்பட்டிருந்த ஒரு வெள்ளை நிற டாடா சபாரி காரில் கோகுல்ராஜை ஒரு கும்பல் கடத்திச்சென்றதாகவும் சுவாதி கூறியதாக சாட்சியம் அளித்தார்.

 

gokulraj


சுவாதியை மிரட்டிய அந்த கும்பல், அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டனர் என்றும் செல்போனை சாயங்காலம் வீட்டில் வந்து கொடுப்பதாகவும் சுவாதி கூறியதாகச் சொன்னார். சுவாதி வீட்டிற்கு வந்தபிறகு, ஒரு ரூபாய் காயின் போன் மூலமாக யுவராஜ் தரப்பை தொடர்பு கொண்டு, தனது செல்போனை கொடுத்துவிடும்படி கேட்டார். அதற்கு யுவராஜ் தரப்பு, சாயங்காலம் உங்கள் வீடு தேடி செல்போன் வந்துசேரும் என்று அவர்கள் கூறியதாக சுவாதி, காவல் ஆய்வாளரிடம் கூறியதாக பார்த்திபன் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே., 'இது முற்றிலும் செவிவழி தகவல். இதை பதிவு செய்யக்கூடாது' என்று ஆட்சேபனை தெரிவித்தார். அதற்கு நீதிபதி கே.ஹெச்.இளவழகன், 'இப்படி எல்லாவற்றுக்கும் ஆட்சேபனை தெரிவித்தால் என்ன செய்வது? எதுவாக இருந்தாலும் நீங்கள் குறுக்கு விசாரணையில் பார்த்துக் கொள்ளுங்கள்,' என்று பதில் அளித்தார். 

 

gokulraj

 

இதையடுத்து சாட்சியத்தைத் தொடர்ந்த பார்த்திபன், யுவராஜ் உடன் வந்த ஒரு ஆண், பெண்ணுடன்  சுவாதியை 'வார்ன்' பண்ணி அனுப்பி விட்டதாகவும் சாட்சியம் அளித்தார்.

பார்த்திபன் சொன்ன 'Warn பண்ணி அனுப்பிவிட்டதாகவும்' என்ற தகவலை நீதிபதி, தன் உதவியாளரிடம் 'எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டதாகவும்' என்று தட்டச்சு செய்யும்படி கூறினார்.

அப்போது குறுக்கிட்ட யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ணலட்சுமண ராஜூ, யுவராஜ் தரப்புக்கு ஆஜரான மற்ற இரு வழக்கறிஞர்களான பிரேம்குமார், ஸ்டீபன் ஆகியோர், 'பார்த்திபன், 'எச்சரிக்கை என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஒரு ஆண், பெண்ணுடன் அனுப்பியதாகத்தான் சொன்னார். ஆனால் நீங்கள் 'எச்சரிக்கை' என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள் என்று ஆட்சேபித்தனர்.

குறிப்பாக வழக்கறிஞர்கள் பிரேம்குமார், ஸ்டீபன் ஆகிய இருவரும், நீதிபதியைப் பார்த்து, 'எச்சரிக்கை' என்ற சொல்லை பார்த்திபன் பயன்படுத்தவே இல்லை என்று திரும்பத்திரும்பக் கூறினர். இதனால் கொதிப்படைந்த நீதிபதி கே.ஹெச். இளவழகன், ''சுவாதியை 'warn' பண்ணி அனுப்பி விட்டதாகவும்'' என்று அரசுத்தரப்பு சாட்சி சொன்னதை, தமிழில் 'எச்சரிக்கை செய்து' என்று பதிவு செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அப்படி ஒரு சொல்லையே அவர் சொல்லவில்லை  என்று ஆட்சேபித்தால் எப்படி? உங்களுக்கு வேண்டுமானால் ஆடியோ ரெக்கார்டிங்கை போட்டுக் காட்டட்டுமா? என்றார்.

 

golkuraj

 

அதற்கு பிரேம்குமார், ஸ்டீபன் ஆகியோர், எங்களுக்கு அந்த சொல் காதில் விழவில்லை என்று சமாளித்தனர். அதற்கு நீதிபதி, 'அரசுத்தரப்பு சாட்சி, சத்தமாகத்தான் பேசுகிறார். அவர் சொல்வது எனக்கும், இங்கே எல்லோருக்கும் நன்றாகத்தான்  கேட்கிறது. உங்களுக்கு கேட்கவில்லை என்று சொன்னால் எப்படி? போய் இருக்கையில் அமருங்கள்,' என்பதை அவர் 'please be seated' என்று ஆங்கிலத்தில் கடுமையாகக் கூறினார். 

அதன்பிறகும் சாட்சிக்கூண்டு அருகிலேயே அவ்விரு வழக்கறிஞர்களும் நின்று கொண்டே இருந்ததால், கோபம் அடைந்த  நீதிபதி, 'be seated' என்று ஆவேசமாக கூறினார். 'சார் நீங்களும்தான்...' என்று யுவராஜ் தரப்புக்காக வந்திருந்த அனைத்து வழக்கறிஞர்களையும் பார்த்து உத்தரவிட்டார். அதன்பிறகு அவர்கள் வேறு வழியின்றி இருக்கையில் அமர்ந்தனர். இந்த சம்பவத்தால் விசாரணை அரங்கத்தில் சிறிது நேரம் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் கோகுல்ராஜின் தாயார் சித்ராவிடம், 'யுவராஜ்தான் உங்கள் மகனை கடத்திச் சென்றதாக ஏன் புகாரில் பெயரைக் குறிப்பிடவில்லை?' என்று கேட்டதற்கு, 'யுவராஜ் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். நானும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். நான் எஸ்சி பையனான கோகுல்ராஜூடன் பழகியது தெரிந்தால் எனக்குப் பிரச்னை வரும். 

கோகுல்ராஜை பத்திரமாக அனுப்பி விடுவார்கள் என்று சுவாதி சொன்னதால், யுவராஜ் பற்றி புகாரில் குறிப்பிடவில்லை என்று சித்ரா கூறியதாக பார்த்திபன் சாட்சியத்தின்போது குறிப்பிட்டார்.

மேலும், சிஆர்பிசி 164 வாக்குமூலத்தில் பார்த்திபன் என்ன தகவல்களைச் சொன்னாரோ அவை அனைத்தையும் இன்று சாட்சியமாக அளித்தார். மதியம் 1.20 மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 2.30 மணிக்கு சாட்சி விசாரணை மீண்டும் தொடங்கியது.

அப்போது, 23.6.2015ம் தேதியன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சுவாதி, கோகுல்ராஜ் ஆகியோர் இருந்த காட்சிகள், யுவராஜ் மற்றும் அவருடன் சில பேரும் வந்து கோகுல்ராஜிடமும், சுவாதியிடமும் பேசும் காட்சிகளும், அவர்களை அழைத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. கேமரா-1, கேமரா-5 ஆகியவற்றில் அடங்கிய அந்தக் காட்சிகளை நீதிமன்றத்தில் திரையிட்டுக் காட்டப்பட்டது. 

 

gokulraj


அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்து சுவாதி, கோகுல்ராஜ் ஆகியோரை பார்த்திபன் அடையாளம் காட்டினார். கோகுல்ராஜ் கத்திரிப்பூ நிறத்தில் முழுக்கை சட்டையும், வெளிர் நீல நிறத்தில் ஜீன் பேன்டும் அணிந்திருக்கும் நபர் என்றும் துல்லியமாகச் சொன்னார். 

மேலும், சுவாதியை ஒரு பெண்ணும், ஒரு ஆணும் அழைத்துச்செல்லும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. சுவாதியை அழைத்துச் செல்லும் நபர்களில் யாராவது இங்கே நீதிமன்றத்தில் இருக்கிறார்களா? என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, அவருடைய உதவியாளர் வழக்கறிஞர் நாராயணன் ஆகியோர் கேட்டனர்.

அதற்கு எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜி.கே., திடீரென்று சத்தமாக 'அயம் சாரி யுவர் ஆனர்!' என்று உரத்த குரலில் ஆட்சேபனை தெரிவித்தார். திடுக்கிட்ட நீதிபதி, எதற்காக ஆட்சேபிக்கிறீர்கள்?. அதற்கான காரணத்தைச் சொல்லாமல் உட்கார்ந்து இரு ந்தால் எப்படி? என்றார். அதற்கு ஜிகே எழுந்து நின்று, 'அழைத்துச் சென்றதாக' என்று கேட்பது தவறு. ஆயிரம் பேர் கோயிலுக்கு சாமி கும்பிட வருவார்கள்... போவார்கள்...' என்று சலிப்புடன் கூறியவாறே இருக்கையில் அமர்ந்தார்.

மீண்டும் நீதிபதி அவரிடம், எதற்காக ஆட்சேபிக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அதற்கு வழக்கறிஞர் ஜி.கே., 'இது பதிலுடைய கேள்வி (leading question)' என்று குறிப்பிட்டார். பின்னர் அரசுத்தரப்பு வழக்கறிஞர், சுவாதியை யார் அழைத்துச்சென்றார்கள் என்று கேள்வி கேட்பதற்கு நீதிபதி ஆட்சேபனை தெரிவித்தார். அப்போதும் நீதிமன்ற விசாரணை அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சிசிடிவி வீடியோ காட்சிகளைப் பார்த்து வழக்கறிஞர் பார்த்திபன் மேலும் சிலரையும் அடையாளம் காட்டினார். வீடியோவில் இருப்பவர் யுவராஜ் என்றும், அந்த வீடியோவில் அவர் வெள்ளை சட்டையும், காக்கி நிற பேன்டும் அணிந்திருக்கிறார் என்றும் பார்த்திபன் அடையாளம் காட்டினார். குற்றவாளி கூண்டில் நீங்கள் சொல்லும் நபர் இருக்கிறாரா என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்டார். 

அதற்கு அவர், குற்றவாளி கூண்டில் (நீதிபதி அமர்ந்த திசையில்) இடமிருந்து 6வதாக நிற்பவர்தான் யுவராஜ் என்று அடையாளம் காட்டினார். அதைக் கேட்ட யுவராஜ், கைகளைக் கட்டியபடி, லேசான புன்முறுவல் செய்தார். வீடியோ காட்சியில்  இருப்பது போலவே இன்றைக்கும் காக்கி நிற பேன்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்து வந்திருக்கிறார் என்று பார்த்திபன் குறிப்பிட்டுச் சொன்னார்.

 

gokulraj

 

சிசிடிவி கேமரா வீடியோவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் அருண், செல்வராஜ், சந்திரசேகர், சதீஸ்குமார், குமார் ஆகியோரையும் பார்த்திபன் அடையாளம் காட்டினார். அடையாளம் காட்டும் நபர்கள் கையை உயர்த்திக் காட்டும்படி நீதிபதி கூறியதால், குற்றம்சாட்டப்பட்டவர்களும் அப்படியே செய்தனர். பார்த்திபன் அடையாளம் காட்டும்போது யுவராஜ் மீசையை தடவியபடியும், பக்கத்தில் இருந்த அருண், கிரி ஆகியோரிடமும் 'குசுகுசு'வென்று பேசியபடியும் இருந்தார்.

 

gokulraj

 

கோகுல்ராஜ் வழக்கு பரபரப்பாக பேசப்பட்ட காலக்கட்டத்தில், அவரே பேசியதாக 30 வினாடிகள் கொண்ட ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் கோகுல்ராஜ், ''எல்லா பொண்ணுங்களும் பொய்யாதான் இருக்காங்க. பொய்யான உலகத்துல இருக்கோம். எங்கப்பா போன இடத்துக்கே நானும் போயிடறேன். பொய்யான பொண்ணால வாழ்க்கையே வேஸ்ட் ஆயிடுச்சு. பொய்யான பொண்ணுங்கள நம்பினா என்ன மாதிரிதான் உங்க வாழ்க்கையும் வீணாகும். என்னால்  முடியவில்லை. அம்மாவும் தம்பியும் நல்லாருங்க...'' என்று பேசியிருந்தார்.

அந்தக் காட்சிகளைப் பார்த்த பார்த்திபன், 'கோகுல்ராஜை யாரோ மிரட்டி இப்படி பேச வைத்திருக்கிறார்கள். அவருக்கு அம்மாவும், அண்ணனும் மட்டும்தான் இருக்கின்றனர். ஆனால் இந்த வீடியோவில் அம்மாவும், தம்பியும் நல்லாருங்க என்று சொல்லி இருக்கிறார்,' என்றார்.

இதையடுத்து, 4.10.2015ம் தேதியன்று தனியார் சேனலில் ஒளிபரப்பான யுவராஜின் சிறப்புப் பேட்டி அடங்கிய வீடியோ காட்சிகளும் பார்த்திபனுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன. அவர்தான் யுவராஜ் என்று மீண்டும் பார்த்திபன் உறுதிப்படுத்தினார். அந்தப் பேட்டியில் யுவராஜ் தெரிவித்த தகவல்களில் இருந்த சில முரண்களையும் பார்த்திபன் சுட்டிக்காட்டினார். 

இவ்வாறு வழக்கறிஞர் பார்த்திபன் சாட்சியம் அளித்தார்.

அப்போது, மாலை 4 மணி ஆகியிருந்தது. அதையடுத்து அவரை குறுக்கு விசாரணை செய்யும்படி, யுவராஜ் தரப்பு மூத்த  வழக்கறிஞர் ஜி.கே. பார்த்து அழைத்தார் நீதிபதி. ஆனால் என்ன நினைத்தாரோ அவர், 'இப்போதே 4 மணி ஆகிவிட்டது. அவரிடம் நிறைய குறுக்கு விசாரணை செய்ய வேண்டியதிருக்கிறது. ஆகையால் நேரம் போதாது. வேறு ஒரு நாளில் குறுக்கு விசாரணையை வைத்துக்கொள்கிறோம்,' என்றார். 

அதற்கு நீதிபதி, 'இப்போது நான்கு மணிதான் ஆகிறது. இன்னும் ஒன்றரை மணி நேரம் நீங்கள் குறுக்கு விசாரணை செய்யலாம். மீதியை அடுத்த வாய்தாவில் பார்த்துக்கொள்ளலாம். நேரத்தை வீணாக்க வேண்டாம்,' என்றார்.

ஆனாலும், எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜி.கே., கண்டிப்பாக வேறு ஒரு தேதியில்தான் குறுக்கு விசாரணை வைக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, வழக்கறிஞர் பார்த்திபனிடம் வரும் 3.12.2018ம் தேதியன்று குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் சுட்டுக் கொலை!

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Pathankot incident mastermind person passed away

 

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முதன்மை பயங்கரவாதியாகச் செயல்பட்ட ஜெய்ஷ்- ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாஹித் லதீஃப் இன்று பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

 

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் இந்திய விமானப் படைத் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் விமானப் படைத்தளத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கு வந்த இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த கொடூர தாக்குதலை ஜெய்ஷ் - ஏ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த அமைப்பில் உள்ள ஷாஹித் லதீஃப் என்பவர் தான் இந்த தாக்குதலுக்கு முதன்மையாகச் செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது. ஷாஹித் லதீஃப் கடந்த 1994 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். இவர் மீது இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

 

இந்நிலையில் தான், பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் இன்று அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து உள்நாட்டுச் செய்திகளில், பயங்கரவாதி ஷாஹித் லதீஃப்பை சுட்டுக் கொன்றவர்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

 

 

Next Story

மருத்துவமனையில் கொடூரம்; இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

 young girl incident at Hospital

 

திருப்பூர் மாவட்டம், அவினாசி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகள் சத்தியஸ்ரீ (21). இவர் திருப்பூர் 60 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவரும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் (21) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், சத்தியஸ்ரீ வழக்கம்போல் தான் பணியாற்றி வந்த மருத்துவமனைக்கு வந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நரேந்திரன், சத்தியஸ்ரீயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிப்போகவே ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சத்தியஸ்ரீயின் வயிற்றில் குத்தியுள்ளார். மேலும், அவர் சத்தியஸ்ரீயின் கழுத்தையும் அறுத்துள்ளார். இதில் சத்தியஸ்ரீ படுகாயமடைந்து மயங்கிய நிலையில் கீழே விழுந்துள்ளார். அதன் பின்னர், நரேந்திரன் அந்த கத்தியை வைத்து தன்னுடைய கழுத்தையும் அறுத்துக்கொண்டு  தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது.

 

இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த அந்த தகவலின் பேரில் திருப்பூர் வடக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சத்தியஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். மேலும், நரேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், சத்தியஸ்ரீக்கும், நரேந்திரனுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பேச்சு வார்த்தை நடத்துவதற்காக நரேந்திரன், சத்தியஸ்ரீ பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு, தான் வைத்திருந்த கத்தியை வைத்து சத்தியஸ்ரீயை குத்தி விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது.