Skip to main content

கனிமொழியின் பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ! -திமுக மகளிர் அணி குதுகலம் !

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவரும், மகளிரணிச் செயலாளருமான கனிமொழி எம்.பி,  தனது பிறந்த நாளை (5.1.2020 ) முன்னிட்டு தனது தந்தை கலைஞரின் நினைவிடத்திலும், பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்திலும் மலரஞ்சலி செலுத்தினார். தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் கனிமொழி.

 

kanimozhi

 

இதனைத் தொடர்ந்து, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, ஐ. பெரியசாமி,சக்கரபாணி உள்ளிட்ட கட்சின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கலைஞரின் செயலாளர்களான சண்முகநாதன், ராஜமாணிக்கம், அறிவாலய நிர்வாகிகள் ஜெயக்குமார், பத்மநாபன்,  பூச்சிமுருகன், மகளிரணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

முன்னதாக இந்திய குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் எம்.பி.க்கள் என பலரும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பல கட்சித் தலைவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.  

கனிமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு  தமிழகத்தின் பல பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடியில் 5.1.2020 அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல், அரசு நூலகங்களுக்கும், பள்ளி நூலகங்களுக்கும் புத்தகங்கள் வழங்குதல், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவளித்தல் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் சாய் அறக்கட்டளையில் உணவு வழங்கப்பட்டது. சென்னை தெற்கு மாவட்ட மகளிரணி சார்பில் விஷ்ராந்தி முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட உதவிகளும், முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு மற்றும் புத்தாடைகள் வழங்குதல், அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாமும், சேலம் கிழக்கு மாவட்ட மகளிரணி சார்பில் முதியோர் இல்லத்தில் உணவும் வழங்கி கனிமொழியின் பிறந்த நாளை கொண்டியுள்ளனர் திமுக மகளிர் அணியினர்.

 

 

சார்ந்த செய்திகள்