Skip to main content

''நல்ல தீர்ப்பா வரும்னு'தான் இவ்வளோ நாள் உயிரோடவே இருந்தேன்..''-கோகுல்ராஜின் தாய் கண்ணீர் பேட்டி!  

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

Gokulraj's mother interviewed in tears!

 

தமிழகத்தையே உலுக்கிய சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதியும் காதலித்து வந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு ஜூன்-23-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக பிணமாகக் கிடந்த கோகுல்ராஜின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. குற்றவாளிகளைத் தண்டிக்காமல் உடலை வாங்கமாட்டோம் என  மறுத்து 2015-ஜூன் 25 ஆம் தேதி கோகுல் ராஜின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மரண வழக்கை விசாரிக்க திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா 2015 செப்.15 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை சம்பவம் தொடர்பாக பலகட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் கைது செய்யப்பட்ட 17 பேரில் பள்ளியப்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி இறந்துவிட்டனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 116 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த மாதம் பிப்.9 ஆம் தேதி முடிந்த நிலையில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள்.  இந்த 10 பேருக்கான தண்டனை விபரம் வரும் 8 ஆம் தேதி வெளியிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

Gokulraj's mother interviewed in tears!

 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கோகுல்ராஜின் தயார் சித்ரா, '' இந்த வழக்கில் தூக்குத் தண்டனை அறிவிக்க வேண்டும் என பார்க்கிறேன். அவ்வளவு கொடூரம் பண்ணிருக்கிறார்கள். ஒரு குழந்தையை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து இப்படி கொடுமை பண்ணியிருக்காங்க. இந்த கொடுமை எந்த பெண்ணுக்கும் எந்த மாணவருக்கும் வரக்கூடாது. எந்த பெத்த தாய்க்கும் இந்த கொடுமை நடக்கக்கூடாது. நான் இவ்வளவு நாளும் செத்து செத்து பிழைச்சிட்டு இருந்தேன். நல்ல தீர்ப்பா வரும்னு'தான் இவ்வளோ நாள் உயிரோடவே இருந்தேன். இப்பொழுது வந்துள்ள தீர்ப்பு நல்ல தீர்ப்பு. குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்'' என்றார் கண்ணீருடன்.

 

 

சார்ந்த செய்திகள்