கரூர் மாவட்டத்தில் ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரம்ஜான் பண்டிகை வரும் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளப்பட்டி பகுதியில் ஏராளமான ஆடுகள் காணாமல் போவது தொடர்கதையாகி வருகிறது. பள்ளப்பட்டி பகுதியைச் சார்ந்த அப்துல் அஜிஸ் மற்றும் பசீர் அகமது உள்ளிட்டோர் 60க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது ஆடுகள் பல நாட்களாக அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆடு திருடும் நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளப்பட்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.