Skip to main content

‘10 ஆயிரமாவது கொடுங்க...’ - லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

Give at least 10 thousand.. - Revenue inspector arrested for taking bribe

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருவம் அருகே உள்ள ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவர், கடந்த 2007 ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரிடம் 90 சென்ட் விவசாய நிலத்தை வாங்கி உள்ளார். அந்த நிலத்தை நாகலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரயம் செய்துள்ளனர். அந்த நிலத்தை சுப்பிரமணிக்கு பட்டா செய்யாமல் இருந்துள்ளது. 

 

இதையறிந்த சுப்பிரமணியன் மகன் மணி(33), தனது தந்தை பெயரில் கிரயம் பெற்ற நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்து தராமல் உள்ளது. எனவே பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே மனு அளித்திருந்துள்ளார். அந்த மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி அலுவலகத்தில் பணி செய்யும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலு, மனு கொடுத்திருந்த மணியை வரவழைத்து ‘உனது தந்தை பெயரில் கிரயம் பெற்றுள்ள நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து தர வேண்டுமானால் எங்களுக்கு ரூ. 15,000 லஞ்சமாகக் கொடுத்தால் விரைவில் பட்டா மாற்றம் செய்து தர முடியும்’ என்று கூறியுள்ளார். அதற்கு மணி, ‘அவ்வளவு பணம் என்னிடம் இல்லை’ என்று கூறியுள்ளார். பிறகு பாலு பேரம் பேசி ‘பத்தாயிரம் ரூபாயாவது கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்ய முடியும். இல்லை என்றால் அந்த பணி நடக்காது’ என்று கூறியுள்ளார். 

 

இதனைத் தொடர்ந்து மணி, கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் சென்று அங்குள்ள போலீசாரிடம் முறையிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான போலீசார் மணி அளித்த புகார் மனு மீது வழக்குப் பதிவு செய்து மணியிடம் ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலுவிடம் நேரில் சென்று கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். அதன்படி மணி நேற்று முதுநிலை ஆய்வாளர் பாலுவிடம் லஞ்சப் பணம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக முதல் நிலை ஆய்வாளர் பாலுவை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.