Skip to main content

கஜா புயல் பாதிப்பு கிராமங்களுக்கு சோலார் விளக்கு! அமெரிக்காவில் நடந்த மொய் விருந்தில் 5 ஆயிரம் டாலர் வசூல்!

Published on 09/12/2018 | Edited on 09/12/2018
a

 

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு சோலார் விளக்குகள் அமைப்பதற்காக அமைரிக்காவில் உள்ள வாகை மகளிர் தமிழ் சங்கம் நடத்திய மொய் விருந்து நிகழ்ச்சியில் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலாகி உள்ளது.

 

நவம்பர் 16 ந் தேதி தமிழகத்தில் கஜா புயல் ஏற்படுத்திய பெரும்பாதிப்பில் இருந்து கிராமங்களையும், விவசாயிகளையும் மீட்கும் பணிகளுக்கு உதவும் நோக்கத்துடன் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வாகை பெண்கள் மேம்பாட்டுக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க வாழ் தமிழர்களை அழைத்து கலாச்சார விழாவான மொய்விருந்து நடத்தி நிவாரண உதவி பெறலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி டிசம்பர் 8 ந் தேதி நடத்திய மொய்விருந்து நிகழ்ச்சி ஒரு உணவு விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு வகையான சைவம், அசைவ உணவுகளை விருந்தாக அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவரும் விருந்து உண்ட பிறகு மொய் எழுதினார்கள். இதில் சுமார் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் மொய் வசூலாக கிடைத்துள்ளது. 

 

am

 

இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும், வாகை பெண்கள் மேம்பாட்டுக்குழுவின் உறுப்பினருமான யாமினி கூறும் போது.. பாரம்பரிய உணவு வகைகளிலிருந்து நவீன உணவு வகைகள் வரை தரமிக்க உணவு வகைகளைக் கொண்டு நடைபெற்ற இம்மொய் விருந்து விழாவில் வடக்கு கரோலினா பகுதியில் வசிக்கும் தமிழர்கள் பெரும்பாலானவர்கள் தமது குடும்பத்தினர்களுடன் கலந்துகொண்டனர். இதற்காக வாகைக்குழுவினர் பெரும் ஒத்துழைப்பை வழங்கினார்கள். அவர்களுக்கும் தாராளமாக மொய் வழங்கிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

 

இந்நிகழ்வைப் பற்றிக் குறிப்பிட்ட போரூர் இராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிவரும், தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான முனைவர்.பூங்குழலி கூறும் போது..  பாதிக்கப்பட்ட  தமிழர்களுக்கான நிகழ்வாக இது இங்கு நிகழ்த்தப்பட்டாலும், தமிழர்கள் மட்டுமல்லாமல், இங்கு வாழும் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என இந்தியர்களாக ஒன்று கூடி சங்கமித்தது மனிதநேயத்தை காட்டியது.

 

வாகைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பொறியாளர் லாவண்யா..  அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றும் தமிழரான மகேந்திரன் 5 மணிநேரம் பயணம் செய்து மொய்விருந்து நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்து சென்றதும், தமிழர்கள், இந்தியர்கள் என்பதோடு சில வெளிநாட்டினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தது மனிதர்கள் எல்லாவற்றையும் தாண்டி நாம் மனிதர்கள் என்னும் மாண்பை உணர்த்துவதாக இருந்ததாக குறிப்பிட்டார்.

 

a

 

இம்மொய்விருந்து விழாவில் கலந்துகொண்ட 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  அளித்த மொய் மூலம் கிடைத்த  5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மூலம் முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான எல்.என்.புரம், மாங்காடு, வடகாடு, கொத்தமங்கலம்,  செரியலூர், உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் தெருவிளக்குகளை அமைக்க இருப்பதாக இந்நிகழ்வை தமிழ்நாட்டில் இருந்தபடியே, வாகை குழுவினரோடு சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியரும் , கல்வியாளர்கள் சங்கமம் ஒருங்கிணைப்பாளருமான சதிஷ்குமார் கூறினார். மேலும் அமெரிக்காவில் நடைபெறும் மொய்விருந்து சேவை நோக்கம் கொண்டது. கலந்து கொண்டவர்களும் இம்மொய் விருந்து நிகழ்வில் பங்கேற்று தம்மால் இயன்ற , விரும்பிய அளவில் நன்கொடையாக நிதி அளிக்கும்  நிகழ்வாக  இது அமைந்துள்ளது. இதனால்  பலன் நமக்கு கிடைக்கும் என எவரும் எதிர்பார்த்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு நன்கொடை அளிக்கவில்லை. அமெரிக்காவில் இருந்தாலும் தமது சொந்த மண்ணை நேசிக்கும் அமெரிக்க தமிழினச் சொந்தங்கள் நன்றிக்கு மட்டுமல்ல, போற்றுதலுக்கும் உரியவர்கள் என்றார். நிகழ்ச்சிய ஏற்பாடுகளை ஜெனிபர், அனிதா, அருள்ஜோதி, திவ்யா, பிரேமலதா, நாகராணி, சத்யா,கலைச்செல்வி, கிருஷ்ணவேணி, தேவகி மற்றும் வாகை குழுவினர் செய்திருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

புதிய மின் பாதைக்காக அழிக்கப்பட உள்ள சாலையோர மரங்கள்... போராடத் தயாராகும் சமூக ஆர்வலர்கள்!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Roadside trees to be cleared for new power line ... Community activists ready to fight!

 

மின்பாதைகள் அமைப்பதற்காக சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழகத்தில் கஜா புயல் தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல கோடி மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதில் சாலையோரத்தில் நின்ற பலநூறு வருட மரங்களும் அடக்கம்.

 

இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கிரீன் நீடா, கைஃபா, மரம் அறக்கட்டளை உள்ளபட ஏராளமான தன்னார்வ அமைப்புகள் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

 

tree

 

மற்றொரு பக்கம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். தற்போதுகூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காலநிலை மாற்றங்களை சமாளிக்கவும் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குருங்காடுகள் உருவாக்கும் திட்டங்களை அமைச்சர் மெய்யநாதன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகள் நடுவதும் மரக்கன்றுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இப்படியான நிலையில்தான் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறை பல மரங்களை அகற்றுவது மட்டுமின்றி புதிய மின்பாதைகள் அமைப்பதாக கூறி மரங்களையும் அகற்றி வருகின்றனர்.

 

இதனால் சாலைப் பணியாளர்களின பல வருட உழைப்பு வீணாகிறது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்து வரும் நிலையில் தற்போது மரக்கன்றுகளுக்கு மேலே மின்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கன்றுகள் வளரும்போது மின்கம்பிகளில் உரசும் என்பதால் அந்த மரக்குழந்தைகளை வெட்டி அகற்றவும் உள்ளனர்.

 

சில மின்கம்பங்களுக்காக பல நூறு மரக்குழந்தைகளை அழிப்பதை விட 10 தூரம் சில மின் கம்பங்களை மாற்றி நட்டால் போதும் மரங்கள் பாதுகாப்பாக வளரும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் இருக்கும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள் மின்கம்பங்களை மாற்றி நடாமல் மரக்கன்றுகளை அகற்ற முயன்றால் போராடவும் தயாராக உள்ளோம் என்கிறார்கள்.