Skip to main content

உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சாமிதுரை மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Former High Court Judge Samithurai passes away Obituary of Chief Minister M. K. Stalin

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. சாமிதுரை (வயது 91) மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். எளிய பின்புலத்தில் பிறந்து, கடும் உழைப்பால் உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்து சட்டத்தின் துணையுடன் சமூகநீதியை நிலைநாட்டியவர் ஐயா சாமிதுரை. முதன்முறை உயர்நீதிமன்ற நீதிபதி ஆகும் வாய்ப்பு வந்தபோது அதனை மறுத்த, பதவி மேல் ஆசைகொள்ளாத அரிய மனிதர் அவர். பின்னர் இரண்டாம் முறை வாய்ப்பு வந்தபோதுதான் மரபு கருதி அதனை ஏற்றுக்கொண்டார்.

 

2018 ஆம் ஆண்டு கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலைஞரின் புரட்சிகரமான பங்களிப்புகளை அவர் பட்டியலிட்டதும், அப்போதே என் மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டு வருங்கால முதலமைச்சர் என அழைத்ததும் என் நெஞ்சில் நீங்காமல் நிழலாடுகிறது. ஜஸ்டிஸ் சாமிதுரையை இழந்து வாடும் அவரது கொள்கை வழித்தோன்றல் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி - கேரள மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய தலைவர் ஜஸ்டிஸ். எஸ். மணிக்குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்