
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலப்பட்டு அடுத்த நாராயணபுரம் பகுதியில் சேர்ந்த லட்சுமணன் மகன் சத்யநாராயணன்(46). இவருக்கு சுகந்தி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு ஆண் மற்றும் 17 வயதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பெண் பிள்ளை உள்ளது. இந்த நிலையில் சத்யநாராயணன் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வீட்டு லோனுக்காக ஐந்து லட்ச ரூபாயை திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வாங்கியுள்ளார்.
இதுவரை ஒரு கணிசமான தொகை கட்டியுள்ள நிலையில் இன்னும் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியதாக தெரிகிறது. கடந்த சிலமாதங்களாக தவணை தொகை கட்டவில்லையாம். அதன் காரணமாக அவ்வப்போது பைனான்ஸ் கம்பெனியின் ஊழியர்கள் சத்யநாராயணனின் வீட்டிற்கு வந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினத்திற்கு முன்பு பைனான்ஸ் ஊழியர்கள் சத்ய நாராயணன் வீட்டிற்கு வந்து திரும்பவும் பணத்தைக் கேட்கும்பொழுது, உனது மனைவி மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொண்ணை பாலியல் தொழிலுக்கு அனுப்பி தங்களுடைய பணத்தைக் கட்டுமாறு ஆபாசமாக திட்டியதாகவும், உனது மகளை வீடியோவாக எடுத்து வெளியே நடமாட விடமாட்டோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பைனான்ஸ் ஊழியர்கள் சத்யநாராயணனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் மயக்கமடைந்த சத்யநாராயணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சத்திய நாராயணனை பைனான்சியர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்த சம்பவம் குறித்து குரிசிலப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.