
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் புளிமூட்டை என்கிற ரங்கநாதன் (60). இவரது மகன் மணிகண்டன் (37). தந்தைக்கும் மகனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. சில நேரங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வசைப் பாடிக்கொள்வதும் நடக்கும்.
இந்த நிலையில் நேற்று (16.06.2021) இரவு, இருவரும் எப்போதும் போல மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். வாய்த் தகராறு முற்றி இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர். அப்போது மணிகண்டன் மது போதையில் இருந்துள்ளார். இந்நிலையில், கோபத்தில் அருகிலிருந்த கத்தியை எடுத்து தந்தை ரங்கநாதன் நெஞ்சில் குத்தியுள்ளார் மணிகண்டன். இதில் பலத்த காயம் அடைந்த ரங்கநாதன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது சம்பந்தமாக வழக்குப் பதிவுசெய்து தந்தையைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள மகன் மணிகண்டனை வலைவீசி தேடிவருகின்றனர்.
இது சம்பந்தமாக போலீசார், கிராம மக்களிடமும் விசாரணை நடத்திவருகிறார்கள். கொலை செய்யப்பட்ட புளிமூட்டை என்கிற ரங்கநாதன் பிரபலமான சாராய வியாபாரியாம். இவர் மீது திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம், மதுபாட்டில் கடத்தல் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.