![fake liquor incident in madurai](http://image.nakkheeran.in/cdn/farfuture/o7LCIq2tz0mpd8zVHk-FbQEXMylAKb0R7x0yLBXnGx8/1622743289/sites/default/files/inline-images/sara2.jpg)
தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. முழு ஊரடங்கின் பலனாக சில நாட்களாக தமிழகத்தில் கரோனோ ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை என்பது குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு என்பது மட்டும் குறையாத நிலையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த முறை ஊரடங்கில் டாஸ்மாக் மூடியதால் குடிமகன்களின் தாகம் தீர்க்க ஆங்காங்கே 'ஹோம் மேட்"சரக்கு தயாரிக்க ஆரம்பித்துள்ளார்கள். அப்படி வீட்டில் சாராயம் காய்ச்சிய நபர் போலீசாரால் கைது செய்து விசாரணை நடக்கிறது. இதுபோல் எங்கெங்கெல்லாம் நடக்கிறது என்றும் போலீசார் துருவ ஆரம்பித்துள்ளனர்.
![fake liquor incident fake liquor incident in madurai in madurai](http://image.nakkheeran.in/cdn/farfuture/bpspfUL-zu0XPRgxeoRRJySaGjab0bb4G6d7cDkJ4TA/1622743508/sites/default/files/inline-images/t_8.jpg)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட வலையங்குளம் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக பெருங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சோதனை செய்த போலீசார் வலையங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யணன் மகன் கார்த்திக் (37) என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.
சாராயம் காய்ச்சிய கார்த்திக்கை கைது செய்த பெருங்குடி போலீசார் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான பொருட்களை பறிமுதல் செய்ததுடன் அவரிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.