
தருமபுரி மாவட்டம் ஏலகுண்டூர் கிராமத்தில், உணவு தேடிவந்த பெண் யானை ஒன்று, 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில், தவறி விழுந்த யானையை மீட்கும் பணியில், வனத்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், 15 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தற்பொழுது மீட்கப்பட்டுள்ளது.
கிணற்றில் தவறி விழுந்த யானையை, முதலில் கிரேன் மூலம் வெளியே கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. அடுத்தபடியாக மயக்க மருந்து செலுத்தி, யானையை வெளியேற்ற வனத்துறை முயற்சி செய்தது. ஆனால், கிணற்றில் ஒரு அடிக்கும் மேலே தண்ணீர் இருக்கும் நிலையில், மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையிலும், தண்ணீரை யானை குடிப்பதால், மயக்கமடைய கால தாமதம் ஏற்பட்டது. மீண்டும், இரண்டாம் முறையாக யானைக்கு மயக்க மருந்து செலுத்தி, கிரேன் உதவியுடன் மீட்க முயன்றபோது, கிணற்றின் பக்கவாட்டில் யானை விழுந்தது. ஆனாலும், தொடர் முயற்சியாக வனத்துறை, தீயணைப்பு வீரர்கள் போராடி இறுதியாக யானையை மீட்டனர்.