Skip to main content

நளினி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதிலளிக்க உத்தரவு

Published on 19/02/2018 | Edited on 19/02/2018
nalini

 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகளை விடுவிக்கும்போது சிபிஐ விசாரித்தவர்களை விடுவிக்க முடியாது என்ற சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி ராஜிவ் கொலையாளி நளினி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற்ம் உத்தரவிட்டுள்ளது.

 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 முதல் 20  ஆண்களுக்கு மேலாக  சிறையில் உள்ள சிறைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதையடுத்து  பிப்ரவரி 1 ஆம் தேதி  அரசாணையும்  வெளியிட்டப்பட்டது. 

 

அந்த அரசாணையில் இந்திய குற்றவியல் விசாரணை  நடைமுறைச் சட்டம் 435வது பிரிவின்  கீழ் சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்பு விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதை எதிர்த்து, ராஜிவ் கொலை  வழக்கில் ஆயுள் கைதியாக 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

அந்த மனுவில்  நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு வழக்கின் பின்னனியையோ அல்லது விசாரணை அமைப்பையோ ஆராயக் கூடாது என்றும், முன் கூட்டியே விடுதலை செய்யும் நடைமுறையில் பரபட்சம் இல்லாமல் அனைத்து கைதிகளையும் சமமாக கருத வேண்டும் என்றும் கூறியுள்ளார். எனவே அந்த அரசாணையில் 435 (1) (ஏ) பிரிவின் கீழ் விடுதலை செய்யமாட்டோம் என்பதை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நளினி தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. வழக்கு ஆவணங்களை பார்த்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள சட்டப்பிரிவை ரத்து செய்யவேண்டும் என உள்ளதால், வழக்கு குறித்தும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தால் சரியாக இருக்கும் என கருதுவதாகவும், அதனால் 4 வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்