
இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதியை (01.01.2024) தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024 ஐ அறிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நேற்று (25.10.2023) நடத்தினார். இந்தக் கூட்டத்தில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது படிவங்களின் தீர்வு மேற்கொள்ளுதல் மற்றும் அதன் அட்டவணை குறித்து தெரிவிக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024 க்கான அட்டவணையை அறிவித்துள்ளது. அதில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 27.10.2023 எனவும், கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் 27.10.2023 முதல் 09.12.2023 வரை எனவும், சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் 04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 எனவும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 05.01.2024 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குச் சாவடி நிலை முகவர்களை நியமிக்கலாம். அம்முகவர்கள் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024 மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு திருத்தங்கள் மற்றும் பிறவற்றை அடையாளம் காண உதவி செய்யலாம். வாக்குச் சாவடி நிலை முகவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பற்றி வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் நிர்ணயிக்கப்பட்ட படிவங்களில் தகவல் வழங்கலாம். சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024ன் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அட்டவணை தொடர்பாக விளக்கக் காட்சி, அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு கூட்டத்தின் போது காண்பிக்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை மற்றும் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டன, என தெரிவிக்கப்பட்டுள்ளது.