Skip to main content

ஓட்டைவாளியில் நீர் இறைக்க முடியாது; அதிமுக அமைச்சரின் ஆலோசனைக்கு ராமதாஸ் அறிவுரை

Published on 28/08/2018 | Edited on 28/08/2018

 

 

 

ramadas

 

 

 

அண்மையில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிகளை சீரமைக்க முன்னாள் மாணவர்கள் நிதிஉதவி வழங்கி உதவி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், அப்பள்ளிகளை தத்தெடுக்கவும், நிதியுதவி வழங்கவும் முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டுக் கொண்டிருக்கிறார். பள்ளிச்சூழலை மேம்படுத்த இது சிறப்பான ஏற்பாடு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல் இத்தகைய உதவிகளைப் பெறுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது.

 

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. பல பள்ளிகளில் சுற்றுச்சுவர், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்களும், நூலகங்களும் மிகவும் பரிதாபமான நிலைமையில் உள்ளன. சில பள்ளிகளில் அவற்றின் தலைமை ஆசிரியரும், பிற ஆசிரியர்களும் தங்களின் சொந்த முயற்சியில் நிதி திரட்டி பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்தியுள்ளனர். அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. அதைப் பின்பற்றித் தான் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தொழில் நிறுவனங்களும், முன்னாள் மாணவர்களும் நிதி உதவி வழங்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அமைச்சரின் நோக்கம் நல்லதாக இருக்கலாம்; முன்னாள் மாணவர்களின் உதவியுடன் கல்வி நிலையங்களை மேம்படுத்துவது உலகம் முழுவதும் செயல்பாட்டில் இருக்கும் வெற்றிகரமான தத்துவமாக இருக்கலாம்; ஆனால், தமிழகக் கல்வித்துறை இப்போதுள்ள நிலையில் இது பயனளிக்குமா? என்பது தான் வினா.

 

 

ஓட்டை வாளியை வைத்துக் கொண்டு நீர் இறைத்தால் அது தண்ணீருக்குத் தான் கேடாகுமே தவிர தாவரங்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது. அதைபோலத் தான் தமிழகத்தின் கல்வி நிர்வாகத்தில் ஏராளமான குறைபாடுகளை வைத்துக் கொண்டு, தொழிலதிபர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் நிதியுதவி பெறுவதும் பயன்தராது. பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பெறப்படும் நிதி விழலுக்கு இறைத்த நீராக பயனற்ற வகையில் வீணடிக்கப்படுமே தவிர, கல்வி வளர்ச்சிக்கு பயன்படாது.

 

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி கற்பிப்பதற்காக அதிகம் செலவிடப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் சராசரியாக ரூ.35ஆயிரத்தை அரசு செலவழிக்கிறது. ஒன்றாம் வகுப்புக்கு ரூ.25155, இரண்டாம் வகுப்புக்கு ரூ.25,184,மூன்றாம் வகுப்புக்கு ரூ.25,383, நான்காம் வகுப்புக்கு ரூ.25,392, ஐந்தாம் வகுப்புக்கு ரூ.25,425 ஆறாம் வகுப்புக்கு ரூ.32,897 ஏழாம் வகுப்புக்கு ரூ.33,066 எட்டாம் வகுப்புக்கு ரூ.33,146 வீதம் தமிழக அரசு செலவழிக்கிறது. ஒன்பது முதல் 12&ஆம் வகுப்பு  வரையிலான மாணவர்களுக்கான செலவுத் தொகை இன்னும் கூடுதலாக இருக்கும். எனினும் இதனால் என்ன பயன்?

 

 

 

ஒவ்வொரு மாணவரின் கல்விக்காகவும் தமிழக அரசு செலவிடும் தொகை தமிழகத்திலுள்ள சில தரமான பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட அதிகமாகும். மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ.27,150 வீதம் தான் செலவிடப்படுகிறது. ஆனால், தனியார் பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் கிடைக்கும் தரமான கல்வி தமிழக அரசு பள்ளிகளில் கிடைக்காதது ஏன்? ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு அரசு பள்ளி மாணவருக்கும் செலவிடப்படும் தொகை தமிழக அரசுப் பள்ளிகளில் செலவிடப்படும் தொகையை விடக் குறைவு. ஆனால், அந்தப் பள்ளிகளின் தரம் அதிகமாக உள்ளது. அப்படியானால் தமிழகத்தில் மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி எங்கோ வீணாகிறது என்று தானே பொருள்? இதை தமிழக அரசு எவ்வாறு சரி செய்யப் போகிறது?

 

தமிழகத்தில் மொத்தம் 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மையக்கணினி மூலம் அனைத்து வகுப்பறைகளில் பாடம் நடத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 26.08.2011 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 2013-ஆம் ஆண்டில் 4340 பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த அளவு கையூட்டு கிடைக்காததால் யாருக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்படவில்லை. இதேதிட்டத்தை புதிய திட்டம் போன்று கடந்த 19.06.2017 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால், அதன்பின் ஓராண்டுக்கு மேலாகியும் அத்திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அதற்கும் காரணம் ஊழல் தான்; அதைத் தவிர வேறில்லை.

 

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 2012-17 காலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.8500 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால், அதற்கான திட்ட வரைவை தமிழக அரசு அனுப்பாததால் நிதியின் அளவை ரூ.4,800 கோடியாக குறைத்து விட்டது. இதனால் ரூ.3,700 கோடி  வீணாகி விட்டது. அதுமட்டுமின்றி, இடைநிலைக் கல்வித்திட்டத்தின்படி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.4,400 கோடியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய அரசு குற்றஞ்சாற்றியுள்ளது.

 

ஒதுக்கப்பட்ட நிதியை செலவழிக்க முடியாத நிலையிலும், கல்வித்தரத்தை மேம்படுத்த முடியாத நிலையிலும் தான் தமிழக கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளன. இதை சீரமைக்காமல் மற்றவர்களிடமிருந்து நிதியுதவி பெறுவது வீண். எனவே, தமிழகத்தில் அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து பரிந்துரைக்க கல்வியாளர்கள் குழுவை அமைக்க வேண்டும். அதன் பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு, முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து நிதி உதவிகளைப் பெற்று அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக செலவிடுவது தான் பயனுள்ளதாக இருக்கும் எனக்கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.