Skip to main content

என்.ஐ.டி மாணவியிடம் அத்துமீறல்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Published on 30/08/2024 | Edited on 30/08/2024
Edappadi Palaniswami condemned for misbehaving with a student in NIT

திருச்சி என்.ஐ.டி மாணவிகள் விடுதியில் மாணவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும் போது இணையதள சேவை அளிப்பதற்காக வந்த ஊழியர்களில் ஒருவரான கதிரேசன் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

சுதாரித்துக்கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தம்போட, அங்கிருந்த மற்ற மாணவர்கள் கதிரேசனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, விடுதி காப்பாளர் மகேஸ்வரி என்பவர் பெண்கள் அறைகுறையாக ஆடை அணிந்தால், இதுபோன்றுதான் நடக்கும் என்று மாணவிகளிடம் அநாகரிகமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அலட்சியமாக நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து என்.ஐ.டி வளாகத்தில் இரவும் முதல் மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.  5 ஆண் ஊழியர்கள் மாணவர்களின் அறைக்கு இணையதள சேவை அளிக்க வரும் போது விடுதி காப்பாளர்கள் உடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், மாணவிகளின் அறைக்குத் தனியாக ஆண் ஊழியர்களை அனுப்பி வைத்திருக்கின்றனர்.  அதன் காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதனால், விடுதி காப்பாளர்கள் மூன்று பேரும் சம்பந்தப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி என்.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து தலைமை விடுதி காப்பாளர் பேபி என்பவர் மாணவர்கள் மத்தியில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேரினார். பின்னர் மாணவர்கள் கலைந்துச் சென்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பெண்கள் விடுதி அறையில், அங்கிருந்த மாணவி முன்பே இணையதள பழுது பார்க்க வந்த நபர் பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  இதுகுறித்து புகாரளிக்க சென்ற மாணவியை காவல் நிலையத்தில் இழிவாக பேசியதாகவும் தகவல் வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களிடம் காவல்துறை இதுபோன்று நடந்துகொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு, சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் கழிப்பறை பகுதியில் மாணவி ஒருவருக்கு வடமாநிலத் தொழிலாளரால் பாலியல் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. திமுக அரசில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை நான் சுட்டிக்காட்டி வந்தும், இந்த அரசு இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க திராணியின்றி செயலற்று இருப்பதன் விளைவே இதுபோன்ற சம்பவங்கள்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தண்டிக்கும் நிர்பயா சட்டத்தை, தமிழ்நாட்டில் ஒரு நிர்பயா சம்பவம் நடந்தால் தான் கையில் எடுப்பதாக இந்த திமுக அரசு எண்ணத்தில் இருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத, இதுகுறித்து புகார் அளிக்கும் பெண்களை கொச்சைப்படுத்த முயலும்  திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். திருச்சி என்.ஐ.டி.யில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு  திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்