
விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு திமுக எம்.எல்.ஏ. சக்கரபாணி கிராம மக்களுடன் திண்டுக்கல் கலெக்டரிடம் மனு அளித்தார்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி தலைமையில், தொகுதியைச் சேர்ந்த கீரனூர் கள்ளிந்தயம் பகுதி மக்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தார்.
இதுபற்றி எம்.எல்.ஏ. சக்கரபாணியிடம் கேட்டபோது, “ஒட்டன்சத்திரம் விவசாயம் சார்ந்த பகுதி. இப்பகுதி மக்கள் மானாவாரியாக மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை 36,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். ஆனால், போதிய மழை இல்லாததால் மக்காச்சோளம் முற்றிலும் சாய்ந்துவிட்டது.
இதனால், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, மிகவும் வேதனையில் உள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்களைக் கணக்கெடுத்து, மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும். அதேபோல், பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு மற்றும் மானிய உதவி வழங்க வேண்டும். அதற்காகத்தான் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்” என்று கூறினார்.