Skip to main content

கீழடி அகழாய்வில் பானைகள் கண்டெடுப்பு!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Discovery of pots in underground excavation

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடியில் ஒன்பது கட்ட அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வாராய்ச்சி பணிகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் 18 ஆம் தேதி (18.06.2024) காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதனையடுத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக 14 இடங்களில் குழிகள் வெட்டப்பட்டு ஒன்றை ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே மீன் சின்னம் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக்களுடன் கூடிய பானைகள் கிடைத்துள்ளது. இரண்டு பானைகள் ஒரே இடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. பழங்கால தமிழர்கள் மிக நேர்த்தியாகப் பானையாக வடிவமைத்துள்ளனர்.

கீழடியில் இரண்டு பழங்கால பானைகள் கண்டறியப்பட்டுள்ள செய்தி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 6 அடி ஆழத்தில் இருந்து இரண்டு பானைகள் கிடைத்துள்ளன. மேலும் பானைகள் இருந்த இடத்தில் மூங்கில் கம்புகள் ஊன்றி கூரைகள் வேயப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூங்கில் கூரைகளைக் கரையான் அரைக்காமல் இருக்க ஆற்றல் மணல் போடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கீழடியில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Discovery of pots with fish motifs on the bottom!

கீழடி 10 ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கீழடி 10ஆம் கட்ட அகழாய்வில் அகழாய்வுக்குழி எண் YW11/3 இல் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் முறையே 58 செ.மீ மற்றும் 96 செ.மீ ஆழத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்புரம் சிவப்பு வண்ணப்பூச்சு பெற்ற பளபளப்பான பானை ஓடுகளில் இம்மீன் உருவங்கள் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. பகுதி உடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ள மீன் உருவம் பொறிக்கப்பட்ட இப்பானை ஓடுகளின் நீளம் மற்றும் அகலம் முறையே 4X 5 செ.மீ மற்றும் 4 X3 செ.மீ ஆகும்” எனத் தெரிவித்துள்ளார். 

Discovery of pots with fish motifs on the bottom!

முன்னதாக, ‘கடலூர் மாவட்டம், மருங்கூரில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வில் இராஜராஜன் காலச் செம்பு நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நாணயம் 23.3 மி.மீ விட்டமும் 2.5 மி.மீ தடிமனும் 3 கிராம் எடையும் கொண்டது’ என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Next Story

நன்றி சொல்ல வந்த கார்த்தி சிதம்பரம்; ஒதுங்கி நின்ற ப.சிதம்பரம்!

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
P. Chidambaram stood aside when Karthi Chidambaram thanked people

சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்றம் செல்வதற்கு முன்பே வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியாகச் சென்று அந்தந்தந்தப் பகுதி திமுக கூட்டணிக் கட்சி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.

அதே போல, வெள்ளிக் கிழமை(14.6.2024) ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதனுடன் கிராமம் கிராமமாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பேசிய அவர், “தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய நல்லாட்சிதான் காரணம். அதே போல என்னைத் தொடர்ந்து வேட்பாளராக அறிவித்த கட்சித் தலைமை, வெற்றி பெறச் செய்த வாக்காளர்கள், களப்பணியாற்றிய அமைச்சர் மெய்யநாதன், கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றிகள். மேலும் உங்களுக்கு தேவையான என்ன காரியமாக இருந்தாலும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ப.சிதம்பரம் வரவில்லையா...? என்று கேட்க, அதோ.. அங்கே நிற்கிறார் என்று கார்த்தி சிதம்பரம் கையைக் காட்டிய திசையில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். மகன் கார்த்தி சிதம்பரம் பிரச்சார வாகனமேறி நன்றி கூறிக் கொண்டிருக்கும் போது ப.சிதம்பரம் மக்களோடு மக்களாக சாலையில் நின்று பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார். சில இடங்களில் காரில் இருந்தே இறங்கவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன் மகனுக்காக மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். ஆனால் இன்று நன்றி சொல்ல வந்துவிட்டு நன்றி அறிவிப்பு பிரச்சார வாகனத்தில் ஏறாமல் ஒதுங்கி நிற்பது ஏன் என்ற கேள்ளி தொகுதி மக்களிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் எழுந்துள்ளது.